Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts

Thursday, January 26, 2012

சிட்னியில் நடைபெற்ற திருமண நிகழ்வு

அண்மையில் சிட்னியில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருந்தேன். மணமகன் சிட்னியில் சிறந்த கலைஞர்களில் ஒருவர். தான் பெற்ற கலை மூலம் உலகமெங்கும் சென்று நிகழ்ச்சி நடாத்தி தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு உதவி செய்து வருபவர். வன்னித் தடுப்பு முகாம்களில் அடைபட்டு இருந்த 3 இலட்சம் தமிழர்களின் நிலையினை அவுஸ்திரெலிய மக்களுக்கு அறியச்செய்வதற்காக சிட்னியில் இருந்து கன்பரா வரை உள்ள 300 கிலோமீற்றர் தூரத்தினை தனது நண்பருடன் நடந்து சென்றவர்.

பகல் பதினொரு மணியளவில் மணமகன் குதிரை வண்டியில் ஏரிக்கரை ஒரத்தில் இருக்கும் பூங்காவில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொட்டகையில் மணத்தோழனுடன் வந்து இறங்கினார். மூன்று தலைமுறைக்கு முன்பாக வலிகாமம் வடக்கில் திருமண நிகழ்வுக்கு குதிரை வண்டியில் தங்களது பரம்பரையில் மணமகன்கள் வருவது வழக்கம், அதே போல மணமகன் வர வேண்டும் என மணமகனின் பாட்டியார் விரும்பியதினால் மணமகன் குதிரை வண்டியில் வந்தார். நாதசுரம், மேளவாத்தியங்கள் வாசிக்கப்பட மணமகன் மேடைக்கு வந்து அமர்ந்தார். மேடைக்கு அருகில் இருக்கும் ஒலிவாங்கியில் திருமண நிகழ்வு பற்றி, அதை முன்னெடுத்துச் சென்றவர் தமிழில் சொல்லிக் கொண்டிருந்தார். வழமையாகத் திருமண நிகழ்வுகளில் காணப்படும் தேவையற்ற சடங்குகள் இத்திருமண நிகழ்வில் இல்லை. ஆனால் சம்பிரதாயங்கள் பேணப்படும் என்று சொன்னார். மேடையில் ஐயர் ஒருவரையும் காணவில்லை. இதனால் வழமையான திருமண நிகழ்வுகளில் ஐயர்மார்களினால் சொல்லப்படும் பொருள் விளங்காத வட மொழி இங்கு உச்சரிக்கப்படவில்லை.

மணமகனின் தகப்பனார் தேங்காய் உடை த்ததும், மணமகனுக்கும் தோழனுக்கும் தலைப்பாகை கட்டும் நிகழ்வு நடைபெற்றது. பொதுவாக ஈழத்தில் பிறந்த பலர் சிட்னியில் தங்களது திருமணத்தின் போது வட இந்திய உடைகளை அணிவது வழக்கம். ஆனால் புலம் பெயர்ந்த நாட்டில் பிறந்த இந்த மணமகன் வேட்டி அணிந்திருந்தார். சால்வையினைக் கொண்டு மணமகனுக்கும் தோழனுக்கும் தலைப்பாகை இங்கு அணிவிக்கப்பட்டது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் வரும் உதயன் பத்திரிகையில் மாப்பிள்ளைகளின் சீதனப் பட்டியலின் விபரங்கள் வெளியாகி இருந்தன. பெரும்பாலான ஆண்கள் தன்னைப் பற்றி நினைப்பதில்லை. ஆனால் தனக்கு வருபவர் இப்படி இருக்கவேண்டும் அப்படி இருக்கவேண்டும். அத்துடன் முக்கியமாக கொழுத்த சீதனம் தரப்பட வேண்டும். சிங்கள அரசு, தமிழர் தயாகத்தினை முற்று முழுதாக கைப்பற்றிய பின்பு தாயக விடுதலைக்காக அர்ப்பணித்த பெண்கள் பலரினை சமுகம் ஒதுக்கி வைத்திருப்பதாக ஊடகங்களில் சில செய்திகள் வந்தன. சிலரை அவர்களின் குடும்பங்களே கண்டு கொள்வதில்லை எனவும் செய்திகள் வந்தன. ஆனால் வன்னியில் இருந்து பெண் ஒருவரைத் தேடிக் கண்டு பிடித்து சிட்னிக்கு அழைத்து, மணமகளாகக் கைபிடிக்க முனைந்தார் புலம் பெயர்ந்த நாட்டில் பிறந்த இந்த மணமகன். மணமகனுக்குத் தலைப்பாகை அணிவிக்கப்பட்டதும், வெவ்வேறு வயதுடைய 28 தோழிகளுடன் மணமகள் மேடைக்கு வந்தார்.

மே 19 2009க்கு முன்பு விடுதலைப்புலிகளை உயர்வாகப் பேசியவர்களில் சிலர் இப்பொழுது விடுதலைப்புலிகளைத் தாழ்த்திப் பேசுகிறார்கள். அவர்களின் தியாகங்களை கொச்சைப் படுத்துகிறார்கள். முன்பு ஊடகங்களில், மேடைகளில் , பொதுவிடங்களில் புலிகளை உயர்வாகச் சொன்ன இவர்கள் மே 2009க்குப் பிறகு வந்த மாவீரர் தினங்களில் கலந்து கொள்வதில்லை. மாவீரர்களின் தியாகங்களை நினைத்துப் பார்ப்பதில்லை. மணமகள் மேடைக்கு வந்ததும் மாவீரர்களை நினைத்து அகவணக்கம் செய்யப்பட்டது.

திருமண நிகழ்வை முன்னெடுத்துச் சென்றவர், தாலி பற்றி ஒரு அறிமுகம் கொடுத்தார். அன்பின் சின்னமாக, அடையாளமாக அணிவிக்கப்படுவது தாலி. இது வேலி என்ற கருத்து தேவையற்றது. வேலி, எம் மனதில் போடவேண்டியது, கழுத்தில் அணியப்படுவதல்ல என்று அவர் கூறியதுடன் திருமண நிகழ்வுக்கு வந்திருந்தோர் தாலியை வாழ்த்தும் நிகழ்வு நடைபெற்றது. அதே வேளை ஓதுவார் ஒருவரால் பஞ்ச புராணம் ஓதப்பட்டது. தொடர்ந்து மணமகன் அளிப்பும் மணமகள் அளிப்பும் இடம்பெற்றன. திருமணம் பற்றி தேசியத்தலைவர் சொன்ன "ஆணும் பெண்ணும் ஒத்திசைவாக ஒருவர் ஒருவரின் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் கௌரவத்தையும் மதித்து, குடும்ப வாழ்வின் பொறுப்புகளைப் பகிர்ந்து, சமுகத்தின் மேம்பாட்டிற்கு உழைத்து, பரஸ்பர புரிந்துணர்வுடன் பற்றுக் கொண்டு வாழ வேண்டும்" என்ற கூற்றினை திருமண நிகழ்வை முன்னெடுத்துச் சென்றவர் சொன்னார். முள்ளிவாய்க்கால் அவலம் வரை தாயகத்தில் அங்குள்ள மக்களுக்கு உதவிய தமிழர் ஒருவர் தேங்காய் உடைக்க, மறைந்த மாமனிதர் தில்லை ஜெயக்குமார் அவர்களின் துணைவியார் ஆசீர்வதிக்கப்பட்ட தாலித்தட்டை ஏந்தி நிற்க, அவர் முன்னிலையில், தாயகத்துக்கு அதிகளவு உதவி செய்யும் தம்பதியினர் தாலியினை எடுத்து மணமகனுக்கு வழங்க, வீரச்சாவடைந்த மாவீரர்களையும், அரச படைகளாலும் இரண்டகராலும் கொல்லப்பட்ட மக்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் நினைவுகூரப்பட்டவேளையில் மணமகனால் மணமகளுக்கு தாலி கட்டப்பட்டது.

திருமண நிகழ்வில் "பொங்கிடும் கடற்கரை ஒரத்திலே மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே மங்களம் தங்கிடும் நேரத்திலே எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே " ,"தென்னங்கீற்று தென்றல் வந்து மோதும் – என் தேசமெங்கும் குண்டு வந்து வீழும் கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும் – அவள் கையில் கூட ஆயுதங்கள் ஏறும்" போன்ற தாயக விடுதலை கீதங்களை அழகாக நாதசுர இசையில் காதுக்கு இனிமையூட்டினார் நாதசுரக் கலைஞர். மக்கள் பெற வேண்டிய பேறுகள் பதினாறு. காளமேகப்புலவர் இப்பதினாறு பேற்றையும் இறைவனிடம் வேண்டிப்பாடிய பாடலை கூறி அழகாக அந்த பதினாறு பேறுகளும் எவை என விளக்கம் தந்தார், திருமண நிகழ்வை முன்னெடுத்துச் சென்றவர். அவையாவன புகழ், கல்வி, வீரம், வெற்றி, நன்மக்கள், துணிவு, செல்வம், உணவுத்தானியம், நல்லூழ், இன்பம், அறிவு, அழகு, பெருமை, அறம், நோயின்மை, நீண்ட ஆயுள்.

மணமகன் மணமகளுக்கு குங்குமப் பொட்டிட, மணமக்கள் மாலை மாற்ற, பெற்றோர், பெரியோர், வந்திருப்போர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்த சுவையான மதிய போசனத்துடன் திருமண நிகழ்வு ஒன்று முப்பது மணியளவில் முடிவுற்றது. வன்னியில் எத்தனையோ பெண்கள் திருமணவயது வந்தும் மாப்பிள்ளைகள் கிடைக்காமல் வாழ்கிறார்கள். இந்த மணமகன் முன்னெடுத்துச் செய்தது போல, புலம் பெயர்ந்த நாட்டில் வாழும் பல இளைஞர்கள், மணம் செய்ய எண்ணும் போது, வன்னிவாழ் பெண்களை வாழ்க்கைத் துணையாக்க முன்வருவார்களா?.

Monday, November 29, 2010

ஊடகவியலாளர் சிவநாயகம் அவர்கள் தனது 80 வது அகவையில் காலமாகிவிட்டார்.


இவர் யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொக்குவில் இந்துக்கல்லூரியிலும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்றார். கல்வியை முடித்ததும் ஊடகத்துறையில் சேர்ந்து டெய்லி நீயூஸ், டெய்லி மிரர் போன்ற பத்திரிகையில் கடமையாற்றினார். இவ்வூடகங்களில் வந்த இவரது ஆக்கங்களினால் இலங்கை முழுவதும் புகழ்பெற்ற ஊடகவியலாளர் என்ற பெயரைப் பெற்றார். இக்காலத்தில் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஆரம்பிக்க சிவநாயம் அவர்கள் யாழ்ப்பாணம் வந்து யாழ்ப்பாணத்தில் 'Saturday Review' என்ற ஆங்கிலப் பத்திரிகையை நடாத்தி அதில் தமிழர்களின் சுதந்திர வேட்கையைப் பற்றிய ஆக்கங்களை எழுதினார். இதனால் இவரது பத்திரிகை நிலையம் சிறிலங்கா இராணுவத்தினால் எரியூட்டப்பட்டது. இதனால் தமிழகத்துக்கு அகதியாகச் சென்று அங்கு தமிழ் தகவல் மையத்தில் வேலை செய்தார். தமிழ் நேசன் என்ற பத்திரிகையை தமிழகத்தில் நடாத்தினார். அப்பத்திரிகையில் தமிழர்களின் போராட்டங்களை எழுதினார். இதனால் இந்திய அரசு இவரை தடாச் சட்டத்தில் சிறையில் அடைத்தது. சிறையில் நோய்வாய்ப்பட்டு இருந்த சிவ நாயகம் அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை கிடைக்க இந்திய அரசு அனுமதி வழங்கவில்லை. மேலும் நோய் அதிகரிக்க, நிபந்தனையின் படி இவருக்கு சிறையில் இருந்து விடுதலை கிடைக்க பிரான்சு நாட்டில் அடைக்களம் பெற்றார். புலம் பெயர்ந்தாலும் கொடிய நோய்க்கு மத்தியிலும் 'Hot Spring' என்ற பத்திரிகையை ஆரம்பித்து அதில் தமிழர்களின் போராட்டத்தினைப்பற்றி எழுதினார். 2005ல் கொழும்பில் நோய் முற்றிய நிலையிலும் எழுதிய புத்தகம் தான் 'Sri Lanka: Witness To History' .இவர் முன்பு எழுதிய மற்றொரு புத்தகம் - 'Pen And Gun'. சுப்பிரமண்யம் சிவநாயகம் அவர்கள் தனது 80 வது அகவையில் காலமாகிவிட்டார்.

Tuesday, October 13, 2009

மீண்டும் ஒரு இந்தியத் துரோகத்திற்குத் துணை போன கலைஞர் கருணாநிதி

பத்து தமிழக எம்.பிக்களின் யாழ்.வருகை வெறும் பம்மாத்துத் தானா?..
"எல்லோரும் வந்து பார்வையிட்டுச் செல்வதற்கு இலங்கையில் உள்ள நலன்புரி நிலையங்கள் மிருகக்காட்சிச் சாலைகள் அல்ல" என்று இந்தியாவுக்கான இலங்கைத் துணைத்தூதர் கிருஷ்ணமூர்த்தி கூறியது தமிழகத்திலிருந்து இந்தியத் தூதுக்குழுவினரைப் பொறுத்தவரை சரியானதாகவே தோன்றுகின்றது. ஏனெனில் நலன்புரி நிலையங்களைப் பார்வையிட்டு மக்களின் அவலங்களை நேரில் கண்டுணர்ந்து அந்த அவலங்களைப் போக்குவதற்கான எண்ணத்தோடு வந்தவர்கள் போல அவர்களின் செயற்பாடுகள் அமையவில்லை.ஒரு சுற்றுலாப் பயணக் குழுவைப் போலவே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துப்பேரின் நிகழ்ச்சிநிரலும் அமைந்துள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த மக்களின் நம்பிக்கைகள் எல்லாம் புஷ்வாணமாகிப் போயுள்ளன.

முதற்கோணலே முற்றும் கோணல் என்பது போல, இந்திய நாடாளுமன்றக் குழுவினரின் முதலாவது நாள் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருந்த கிழக்கு மாகாண விஜயம் எவ்வித காரணங்களும் கூறப்படாமலேயே இரத்துச் செய்யப்பட்டது. இன்னமும் இதற்குரிய காரணங்கள் சம்பந்தப்பட்டவர்களால் தெரிவிக்கப்படவேயில்லை. தமிழ்க் கட்சிகளோடு கலந்துரையாடியதோடு மட்டுமே இந்திய நாடாளுமன்றக் குழுவினரின் முதல்நாள் முடிவடைந்தது.
இரண்டாம் நாளில் (11.10.2009) காலை 8.30 இற்கு யாழ்ப்பாணத்திற்கு இந்திய நாடாளுமன்றக் குழு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவுக்கு வரவேற்பு நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியிருந்த யாழ். பொது நூலக கேட்போர் கூடத்திற்கு 8 மணிக்கு முன்னதாகவே குடாநாட்டின் முக்கியப் பிரமுகர்கள், அரச உயரதிகாரிகள், வர்த்தகப் பிரமுகர்கள், சமூகசேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்போர் சென்று காத்திருக்கத் தொடங்கினர். காத்திருந்து காத்திருந்து விழிகள் பூத்ததுதான் மிச்சம். 10.30 மணிவரையும் நாடாளுமன்றக் குழுவினர் வரவேயில்லை.பொதுநூலகத்திற்கு வெளியே குழுமியிருந்த ஏராளமான பொதுமக்கள் இதனால் மனம் வெறுத்துப் போய் திரும்பிச் செல்லத் தொடங்கி விட்டனர்.அந்தநேரத்தில் பெரியமனது பண்ணி வானத்தில் ஹெலிகள் வட்டமிட்டு வந்திறங்கின. அதிலிருந்து இந்தியக் குழுவினர் பரபரப்போடு இறங்கினர்.அவர்கள் இறங்கிய வேகத்தைப் பார்த்தபோது அடுத்த நொடியே மக்களின் அவலங்களை தீர்த்துவைத்து விடுவார்கள் போலத் தெரிந்தது! ஆயினும் அணிவகுப்பு மரியாதையோடு உள்நுழைவதில் காட்டிய அவசரமும் அக்கறையும் மக்களின் பிரச்சினைகளை செவிமடுப்பதில் அவர்கள் சிறிதள வேனும் காட்டவில்லை.எல்லாம் செய்கிறோம் என்ற ஒற்றைச் சொல் "மந்திரம்".


இந்தியக் குழுவினர் பொது நூலகத்துக்குள் உள்நுழையும் முன்னர் அவர்களைச் சூழ்ந்துகொண்ட பொதுமக்கள் கைகூப்பி, கண்ணீர்மல்கி "முகாம்களில் வாடும் எங்கள் உறவுகளை விடுவிக்க ஏற்பாடு செய்யுங்கள். இத்தனை நாளும் நாங்கள் பட்ட துன்பங்களும் துயரங்களும் போதும். இனியும் அந்த வாழ்வு வேண்டாம்" என்று நெஞ்சுருகும் வகையில் நெகிழ்வுடன் இந்தியக் குழுவினரின் கைகளைப் பற்றியவாறு கூறினார்கள். ஆனால் அவர்களுக்கு ஆறுதல் வார்த்தையேதும் கூற மறந்த இந்தியக் குழுவினரின் முகங்கள் இயந்திரத்தனமாக இறுகியே இருந்தன.அவர்களின் இதயங்கள் மக்களின் அவலமொழி கேட்டு கொஞ்சமேனும் இளகியதாகத் தெரியவில்லை. "எல்லாம் செய்கிறோம்" என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் பதிலாகக் கொடுத்துவிட்டு விடுவிடென்று வரவேற்பு நிகழ்வுக்காக நூலகத்துக்குள் சென்றுவிட்டார்கள்.

நூலகத்துக்குள் இந்தியத் தூதுக்குழுவினரின் வருகையை எதிர்பார்த்து இரண்டரை மணிநேரமாக அங்குள்ளவர்களின் காத்திருப்பு நிகழ்வு ஒருவாறு முடிவுக்கு வந்தது. "பராக்!! பராக்!!! இந்தியக் குழுவினர் வருகிறார்கள்" என்று கட்டியம் சொல்லாத குறைதான். அந்தளவுக்கு அதிகாரத் தோரணையோடு மேடையில் ஏறியமர்ந்தார்கள் அவர்கள்.அதன்பின் இந்தியக் குழுவுக்குத் தலைமை வகித்து வந்திருந்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரி.ஆர்.பாலு உரையாற்ற எழுந்தார்.

"ரைம் ஷார்ட்டா இருக்கிறதனால ஸ்ரைட்டா மேட்டருக்கு வாங்க"
(நேரம் குறைவாக இருப்பதால் நேரடியாக விடயத்துக்கு வாருங்கள் என்பதைத் தான் இப்படித் "தமிழில்" கூறினார்.)
என்று கூறி மக்களை நோக்கி அவர்களது பிரச்சினைகளைத் தனக்குக் கூறுமாறு வேண்டினார். அட! மக்கள் பிரச்சினைகளை அறிவதில் பாலு இவ்வளவு ஆர்வம் காட்டுகிறாரே என்று அங்குள்ளவர்கள் அடைந்த ஆச்சரியம், மக்கள் பிரச்சினைகளை அவர் கேட்பதில் காட்டிய அசிரத்தையால் இருந்த இடம்தெரியாமல் மறைந்தோடி விட்டது. அங்கு பிரச்சினைகளை எடுத்துரைக்க முற்பட்ட பலரும் நலன்புரிநிலையங்களில் வாடும் மக்களைப் பற்றியும் அவர்களின் விடுவிப்புப் பற்றியுமே அதிகமாகப் பிரஸ்தாபித்தார்கள். மக்கள் எல்லோரும் ஒரே குரலில் இவ்வாறு நலன்புரிநிலைய மக்களைப் பற்றிக் கூறத்தொடங்கியது இந்தியக் குழுவுக்குத் தலைமை வகித்த ரி.ஆர்.பாலுவுக்கு ஏனோ பிடிக்கவில்லை.


இன்றைய எரியும் பிரச்சினை பற்றி அறிய வந்தவர்கள்
மக்களின் மனஆதங்கத்தை அறிந்துகொள்ள விரும்பவில்லையே!



எரியும் பிரச்சனை குறித்து கண்டறிய வந்தவர்களின் போக்கு .....

"இதெல்லாம் நமக்குத் தெரியும். ஒரே விஷயத்தையே எல்லோரும் சொல்லாதீங்க. வேறு ஏதாவது சொல்லுங்க" என்று கிளிப் பிள்ளைபோல திரும்பத் திரும்ப சற்று அதிகாரத் தொனியில் அங்கு குழுமியிருந்தவர்களை வேண்டினார்.இப்போது இலங்கைத் தமிழர்களின் முன்னாலுள்ள மிகப்பெரிய "எரியும் பிரச்சினை" நலன்புரிநிலையங்களில் வாடும் மக்கள்தான். எனவே அவர்கள் அனைவரும் அதைப் பற்றித்தான் அதிகம் பேசமுடியும். நலன்புரிநிலைய மக்களின் பிரச்சினைகளை அறியத்தான் இந்தியக் குழுவே இலங்கைக்கு வந்திருந்தது வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அப்படியிருக்கையில் நலன்புரி நிலைய மக்களைப் பற்றி எல்லோரும் கதைப்பதை ரி.ஆர்.பாலு ஏன் விரும்ப வில்லையென்பது புரியவேயில்லை. அத்துடன் அங்கு நிகழ்ந்த கருத்தாடலை வேறொரு திசைநோக்கி நகர்த்தவே அவர் பெரிதும் விரும்பினார்.

அத்துடன் பலர் தமது கருத்துக்களைக் கூறிக்கொண்டிருக்கும்போதே பாலுவால் அதட்டும் தொனியில் அவர்களது கருத்து தொடர்ந்து தெரிவிக்கப்படாது தடுக்கப்பட்டது. வேறு விடயங்களைப் பேசுங்கள் என்று பாலு கூறியதால் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் நிதிப்பிரச்சினை பற்றியும், பெண்களுக்கு இடஒதுக்கீடு பற்றியும் இப்போதைக்கு அவசரமோ அவசியமோ இல்லாத உப்புச் சப்பற்ற விடயங்களே அதன்பின்னர் அவர்களுக்கு கூறப்பட்டது. நலன்புரிநிலைய மக்களின் பிரச்சினைகள் பற்றி கூறப்பட்டபோது விட்டேத்தித் தனமாக இருந்த இந்தியக் குழுவினர் இத்தகைய சில்லறைப் பிரச்சினைகள் பற்றிக் கூறும்போது மிக அவதானமாக அவற்றைச் செவிமடுத்ததுதான் அன்றைய பெரும் வேடிக்கை!

நூலகத்தில் நிகழ்ந்த வரவேற்பு நிகழ்வு முடிவடைந்த பின்னர், யாழ்.பல்கலைக்கழகத்துக்குச் சென்று பல்கலைக்கழக மாணவர்களைகுறிப்பாக நலன்புரி நிலையங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை சந்திப்பதே இந்தியக் குழுவினரின் அடுத்த நிகழ்வாக இருந்தது.ஆயினும் 8.30 மணிக்கு வரவேண்டிய இந்தியக் குழுவினர் ஆடியசைந்து 10.30 மணிக்கே வந்ததால் இந்நிகழ்வில் மாற்றம் செய்யப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து பஸ்வண்டிகள் மூலம் நூலகத்துக்குக் ஏற்றி வரப்பட்டனர். அங்கு "இந்தியக் குழுவினர் கேட்போர் கூடத்தில் நடக்கும் வரவேற்பு நிகழ்வு முடிந்தபின்னர் வெளியே வரும்போது வீதியில் நீங்கள் அவர்களைச் சந்திக்கலாம்" என்று மாணவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆயினும் அதற்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் பத்துப்பத்து மாணவர்களாக உள்நுழைய அனுமதிக்கப்பட்டனர். இதனால் இந்தியக் குழுவைச் சந்திக்கச் சென்ற பல்கலைக்கழக மாணவர்களில் அரைவாசிப் பேரே உள்நுழைந்து அவர்களைச் சந்திக்க முடிந்தது.அந்தச் சந்திப்பின்போது நலன்புரிநிலையத் திலிருந்து வந்த மாணவர்களைத் தனியே சந்தித்து அவர்களது கருத்துக்களை அறியவோ அல்லது அவர்களுக்கான கல்வி தொடர்பான உதவிகளை வழங்குவது பற்றியோ இந்தியக் குழுவினர் மறந்துபோயும் வாய்திறக்க வில்லை. ஆயினும் பல்கலைக்கழகத்துக்கு வராமல் தம்மை இந்தியக்குழுவினர் அவமதித்து விட்டமையால் மாணவர்கள் தமது பிரச்சினைகளைத் தயங்காமல் கேட்டார்கள்.

"ஒரு ராஜீவ்காந்தியின் உயிருக்குப் பதிலீடாக இன்னும் எத்தனையாயிரம் தமிழ் மக்களைப் பலி கொள்ளப்போகிறீர்கள்?"
"வடக்குகிழக்கு இணைந்த மரபுவழித் தாயகம் தமிழர்களுக்குச் சுயாட்சியுடன் கிடைக்கும் தீர்வே அவசியம். அதற்கு இந்தியா என்ன செய்யப்போகிறது?"
"எம்முடைய குடும்பத்தவர்கள் நலன்புரி நிலையங்களில் வாடுகிறார்கள். அவர்களை எம்முடன் சேர்த்துவைக்க உதவுவீர்களா?" என்று கேள்விக் கணைகள் பல்கலைக்கழகத் தரப்பிலிருந்து இந்தியக் குழுவை நோக்கி ஏவப்பட்டன. அப்போதும் உரிய பதிலேதும் சொல்லாமல் விட்டேத்தித் தனமாக "எல்லாம் செய்கிறோம்" என்ற ஒற்றைச் சொல்தான் பதிலாக வந்தது.

கல்லும் கசிந்துருகும் கண்ணீர்க் கதையின் போது .....
அத்துடன் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கண்ணீர் விட்டுக் கதறியபடி நலன்புரிநிலையத்திலிருக்கும் தன் குடும்பத்தவர்கள் பற்றி கல்லும் கசிந்துருகும் வண்ணம் விவரித்துக் கொண்டிருக்கும்போது, மேடையில் அமர்ந்திருந்த இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத், வலு "ஹாயாக" சிகரெட் ஒன்றை ரசித்து ரசித்துப் புகைத்துக்கொண்டிருந்தார். ஒட்டுமொத்தத்தில் இந்தியக் குழுவினரின் யாழ்.விஜயம் எந்தவித அர்த்தப் பெறுமானத்தையும் கொண்டிராமல் பூஜ்ஜியமானதாகவே அமைந்துவிட்டது.

"இலங்கையிலுள்ள எல்லா நலன்புரிநிலையங்களையும் பார்வையிட்டு அங்குள்ள மக்களின் குறைகளை அறியவே இங்கு வந்துள்ளோம்" என்று நூலகத்தில் மார்தட்டினார் ரி.ஆர்.பாலு. ஆனால் குடா நாட்டிலுள்ள எந்த ஒரு நலன்புரிநிலையத்துக்கும் அவர்கள் செல்லவேயில்லை. இந்தியக் குழுவினர் வருவார்கள், தமது குறைகளைக் கேட்பார்கள் என்றெண்ணிக் காத்திருந்த பல நலன்புரிநிலைய மக்கள் இலவுகாத்த கிளிகளாக ஏமாந்து போனதுதான் மிச்சம். உல்லாசப் பயணிகள்போல "வந்தார்கள், சென்றார்கள்" என்ற ரீதியில் இந்தியக்குழு நடந்துகொண்டிருப்பதால் அவர்களின் இலங்கை விஜயத்தின் மூலம் இலங்கைத் தமிழர் களின் பிரச்சினையிலோ நலன்புரிநிலைய மக்களின் பிரச்சினையிலோ எவ்வித செயலூக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்காக கப்பலில்அனுப்பப்பட்ட பொருள்களையே உரிய முறையில் இறக்கி மக்களுக்கு வழங்கச் செய்வதில் கையாலாகாத்தனமாக இருக்கின்றது இந்திய அரசு. அப்படியிருக் கையில் வெறும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவசரத்தனமான திட்டமிடலற்ற மேம்போக்கான விஜயம் மாற்றத்தைக் கொண்டுவரும் என நம்பினோமானால் மீண்டும் ஏமாறுவதைத் தவிர வேறேதும் நடக்கப்போவதில்லை. *


- ஒளண்யன் -
-உதயன்

Monday, May 25, 2009

காந்தி தேசமே! இது நீதியா?

வன்னியில் ஏற்பட்ட பேரழிவுக் கொடூரங்களினால் துடித்துப் போய்க் கலங்கி நிற்கின்றது தமிழினம்.

தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்ற அவலம் ஒருபுறம். அநீதி இழைத்த தரப்புக்களைத் தட்டிக் யேட்க வக்கில்லாமல் மௌனித்திருக்கும் சர்வதேசம் குறித்து மறுபுறம் பெருவிசனம். வெஞ்சினம் மனதுக்குள் குமுறுகின்றது. துன்ப துயரங்களோடு அதனையும் சகித்துப் பார்த்திருப்பதைத் தவிர தமிழினத்துக்கு வேறு மார்க்கம் என்னதான் உண்டு?

ஆனாலும் விடுதலைப் புலிகளை அழிக்கும் யுத்தத் தின் பேரில் அப்பாவித் தமிழ்ப் பொதுமக்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றொழிக்கப்பட்டமையைப் பார்த்தி ருக்க மாட்டோம் என்றும்
மக்களைக் கொன்றொழிக்கக் காரணமானோர் சர்வ தேசச் சட்டங்களின் விசாரணைகளில் இருந்து தப்பிப் பிழைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும்
ஒரு செய்தியை ஆறுதல் தகவலை இப்போது சர்வ தேசம் கூற முற்படுவதாகத் தெரியவருகின்றது.

இலங்கை யுத்தத்தில் இடம்பெற்றவை என்று கூறப் படும் போர்க் குற்றங்கள் குறித்து விசேடமான விசாரணை கள் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கும் பிரே ரணை ஒன்று நாளை ஜெனீவாவில் நடைபெற விருக்கும் ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் விசேட கூட்டத்திற்கு வரவிருப்பதாகத் தெரிகின்றது.

அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்த விட யத்தை மனித உரிமைகள் கவுன்ஸிலில் விசேட விவ காரமாக ஆராய்வதற்கான பிரேரணையாகக் கொண்டு வருவதற்குத் தேவைப்படும் மேலும் பதினாறு உறுப்பு நாடுகளின் ஆதரவை இதற்குப் பெற்றிருக்கின்றன என்று கூறப்படுகின்றது. ஆர்ஜென்ரீனா, பொஸ்னியா, கனடா, சிலி, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி,மெக்ஸிக்யோ, மொரிஸியஸ், நெதர்லாந்து, கொரியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா,சுவிட்ஸர்லாந்து, உக்ரைன், உருகுவே போன்ற நாடுகளே அவை.
எனினும், ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலில் மொத்தமாக அங்கம் வகிக்கும் 47 நாடுகளில் தனக்கு ஆதரவான தேசங்களை ஒன்று திரட்டி, இலங்கைப் போர்க் குற்றங்கள் தொடர்பான விடயங்கள் கவுன்ஸி லின் முன் எடுக்கப்படுவதைத் தடுக்கும் தீவிர முயற்சியில் கொழும்பும் இறங்கியிருப்பதாகத் தகவல்.

இந்தியா, சீனா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, மலே ஷியா, பஹ்ரைன், பிலிப்பைன்ஸ், கியூபா, சவூதி அரே பியா, எகிப்து, நிக்கராகுவா, பொலீவியா போன்ற தேசங் களே இலங்கைக்காக வரிந்து கட்டிக் கொண்டிருக்கின் றன என்று கூறப்படுகின்றது.
எனினும், இவ்விடயத்தில் இலங்கைக்கு ஆதரவாக நிற்கும் நாடுகளை வழிக்குக் கொண்டு வருவதற்குத் தன்வசம் உள்ள ஆயுதம் ஒன்றை அமெரிக்கா கடைசி நேரத்தில் பயன்படுத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

வன்னிக் களத்தில் இறுதி நேர யுத்தம் எவ்வாறு கொடூரமாக குரூரமாக முன்னெடுக்கப்பட்டது என்ப தைத் தனது செய்மதி உளவுத் தகவல்கள் மூலம் மிகத் துல்லியமாகவும், துலாம்பரமாகவும் அமெரிக்கா பதிவு செய்து வைத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. சர்வ தேசப் போரியல் குற்றங்களாக அர்த்தப்படுத்தப்படக் கூடிய பல அம்சங்கள் ஆதாரத்தோடு தெளிவாக அவற் றில் அடங்கியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இலங்கை விடயத்தைப் போரியல் குற்ற விசார ணைக்கு உட்படுத்தக் கூடாது என வாதிடும் தேசங் களுக்கு இந்த ஆதாரங்களின் ஒரு பகுதியைக் கடைசி நேரத்தில் அமெரிக்கா கசிய விட்டு விட்டு, இந்த விட யங்கள் குறித்தா விசாரிக்கக் கூடாது என வாதிடுகின் றீர்கள் என அமெரிக்கத் தரப்புக் யேள்வி எழுப்பும் என் றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கைப் பிரச்சினையில் ஈழத் தமிழர்களுக்கு நியாயம் செய்ய மறுத்து, அவர்களுக்கு எதிரான போரில் கொழும்புக்குத் துணை போனது பாரதம்.

இப்போது, அந்த யுத்தத்தில் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள் குறித்து நடைபெறக் கூடிய சர்வதேசவிசாரணைகளுக்கு முட்டுக்கட்டை போட்டு, அதன்மூலம் ஈழத் தமிழர்களுக்கு சர்வதேசத் திடம் இருந்து கிடைக்கக்கூடிய நீதிக்கும் வேட்டு வைக்க முயல்கிறது அதே பாரதம்.

ஈழத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்த இழைத்து வருகின்ற இந்தியக் காங்கிரஸ் கட்சியின் அரசுக்கு முண்டு கொடுத்ததன் மூலம், ஈழத் தமிழர்களுக்கு முதுகில் குத்தும் கொடூரத்துக்குத் துணை போன தமிழக சக்தி களும், கட்சிகளும் இப்போது சர்வதேசவிசாரணைகள் மூலம் ஈழத் தமிழருக்கு நீதி கிடைப்பதை முட்டுக்கட்டை போட்டுத் தடுக்கும் கொடுமையில் இந்தியா ஈடுபடும்போது என்ன செய்யப் போகின்றன?

ஈழத் தமிழர்களின் விடயத்தைப் பொறுத்தவரை பாரதம் உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செசாயாமல் இருந்தால் போதும். ஈழ யுத்தத்தில் கொழும் புக்கு நேரடியாகத் துணைபோய், அதன் மூலம் உபத் திரவம் செய்த இந்தியா, இப்போது ஈழத் தமிழர்களுக்கு இறுதியில் நீதி, நியாயம் செய்யக்கூடிய சர்வதேசநீதி மன்ற விசாரணைக்கும் தடைக்கல் போடுவதன் மூலம் தனது உபத்திரவத்தைத் தொடர முயல்கின்றது. காந்தி தேசமே! இது உனக்யே நீதியா?

- உதயன்