Wednesday, September 19, 2012

சிட்னியில் நடைபெற்ற உங்களின் கதையைச் சொல்லுங்கள் (Tell Your Story)என்ற நிகழ்வு

அண்மையில் சிட்னியில் நடைபெற்ற தமிழர்களின் குரல்(Voice of Tamils) என்ற அமைப்பினால் நடாத்தப்பட்ட 'உங்களின் கதையைச் சொல்லுங்கள்' (Tell Your Story) என்ற நிகழ்வுக்கு சென்றிருந்தேன். பொதுவாக சிட்னியில் ஈழத்தமிழர்களினால் நடாத்தப்படும் நிகழ்ச்சி என்றால் தென்னிந்தியா தமிழ் திரைப்படப் பாடல்கள், வட இந்திய திரைப்படப்பாடல்களுக்கு கவர்ச்சியான உடைகள் அணிந்து ஆடும் குத்தாட்டங்கள், இதிகாச நாடகங்கள், இராமர்,காந்தி என்று தான் இருக்கும். ஈழத்தமிழர்களின் அவலங்கள் இருக்காது. சென்ற வருடமும் தமிழர்களின் குரல் அமைப்பினால் நடாத்தப்பட்ட நிகழ்ச்சிக்கு நுளைவுச்சீட்டினை வாங்கியும், தவிர்க்கமுடியாத காரணங்களினால் நிகழ்ச்சிக்கு நான் செல்லவில்லை. அந்நிகழ்வுக்கு சென்ற நண்பன் ஒருவரை அந்நிகழ்வு பற்றி அபிப்பிராயம் கேட்டேன். ஈழத்தமிழர்களும், வேற்று நாட்டவர்களும் தங்களது நாட்டின் பிரச்சனைகளை நடன வடிவில் கொண்டுவந்தார்கள். பல வெளினாட்டவர்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டார்கள். நடுவர்களாக அவுஸ்திரெலியர்கள் கலந்து கொண்டார்கள். சேகரிக்கப்பட்ட பணம் உலகத்தமிழர் பேரவை உட்பட சில அமைப்புக்களுக்கு வழங்கப்பட்டதாக நண்பன் எனக்கு சொன்னார். இம்முறை, சென்றமாதம் 8ம்திகதி சிட்னியில் உள்ள சில்வர்வோட்டர் என்ற இடத்தில் இருக்கும் சி3 அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியினை ஈழத்தமிழர் ஒருவரும், மேற்கிந்தியா தீவுகளில் ஒன்றான ஐமேக்கா நாட்டினைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவரும் தொகுத்து வழங்கினார்கள்.
முதலில் உலகில் இன விடுதலைக்காக போரிட்டு வீரமரணம் அடைந்த மாவீர்ர்களுக்கும், போரினால் இறந்த பொதுமக்களுக்கும் ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. மங்கள விளக்கேற்றலின்பின்பு கரிசன் இளங்கோவன் அவர்களின் புஸ்பாஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
தமிழர்களின் குரல் அமைப்பின் தலைவர் இந்நிகழ்வு நடைபெறுவதன் நோக்கம் பற்றி சிறப்பாக உரையாற்றினார். பிரதம விருந்தினர் "இனத்தினால் வேறுபட்டாலும் நாங்கள் அனைவரும் அவுஸ்திரெலியர்கள். ஆனால் எமது மொழி அடையாளத்தினை மறக்கக்கூடாது" என்று உரையாற்றினார். இந்நிகழ்வில் ஈழம், பர்மா, தென்சூடான் போன்ற நாட்டவர்களின் கலாச்சாரம், அவலங்கள் நடனப் போட்டியாக நடைபெற்றது. பர்மா நாட்டினைச் சேர்ந்த ஒரு கிராமமக்கள் தாங்கள் வாழும் கிராமத்தில் உள்ள பெண்கள் தண்ணீர் பிரச்சனைக்காக பல தூரம் சென்று தண்ணீரை குடங்களில் பெற்று வருவதினை நடனத்தில் வெளிப்படுத்தினார்கள். தண்ணீர் எடுக்கப்போகும் போது ஏற்படும் பிரச்சனைகளை அழகாக 8, 9 வயது சிறுமிகள் நடனம் ஆடி வெளிப்படுத்தினார்கள். நடனமாடிய சிறுமி ஒருவர் இங்கு சிட்னியில் வீட்டிலேயே குழாயின் மூலமாக நீரினைப் பெறக்கூடியதாக இருப்பது மகிழ்ச்சியான விடயம் என்று சொன்னார்.
500 வருடங்களுக்கு முன்பு ஈழத்தில் வயலில் இருந்தும் கடலில் மீன்பிடித்தும் மகிழ்ச்சியாக வாழ்ந்த இனம் தமிழினம். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியரின் வருகைக்குப் பிறகு தமிழினம் அடிமைப்பட்டு, தற்பொழுது சிங்கள இனத்தினால் அடிமைப்பட்டு இருக்கின்றது. சிங்கள அரசினால் மேற்கொள்ளப்பட்ட கலவரங்களினால் பல தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். பெண்களின் கற்புகள் சூறையாடப்பட்டன. தமிழர்களின் உடமைகள் அழிக்கப்பட்டன. தமிழர்களின் கல்வி மறுக்கப்பட்டது. இதனால் தமிழர்கள் போராட வெளிக்கிட்டார்கள். பல வெற்றிகளைப் பெற்றார்கள். ஆனால் உலக நாடுகளின் உதவியுடன் 2009ல் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் ஒரு சில நாட்களில் கொண்டு குவிக்கப்பட்டார்கள். இவற்றை ஈழத்து கலைஞர்கள் நடன நிகழ்வின் மூலம் வேற்று இன மக்களுக்கு வெளிக்கொண்டு வந்தார்கள்.
(வட) சூடான் நாட்டு அரசினால், தென் சூடான் நாட்டு மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கொடுமைகளை தென் சூடான் நடனக்கலைஞர்கள் நடனம் ஆடி, எங்களுக்கு அவர்களின் அவலங்களைச் சொன்னார்கள். தென்சூடான் மக்களின் எழுச்சி கீதம் நடன நிகழ்வில் பாடப்பெற்றது.அண்மையில் தென் சூடான் சுதந்திர நாடாக விடுதலை அடைந்திருக்கிறது. ஈழத்தமிழர்களைப் போல 30 வருட போராட்ட அனுபவங்களை தென் சூடான் மக்களும் அனுபவித்திருக்கிறார்கள்.
நடுவர்களின் தீர்ப்பின் மூலமும், பார்வையாளர்களின் வாக்களிப்பின் மூலமும் ஈழத்து நடனம் முதல் இடத்தினை பெற்றது. 3 அமைப்புக்கும் பரிசுப்பணம் கிடைத்தது. பர்மா, தென் சூடான் கலைஞர்களுக்கு கிடைத்த 1000 வெள்ளிகளை தங்களது தாயக மக்களுக்கு உதவுவதற்காக செலவளிக்கப்போவதாகச் சொன்னார்கள். ஸ்கொட்லாந்தினைச் சேர்ந்த நடுவர் ஒருவர், ஸ்கொட்லாந்தின் விடுதலை பற்றியும் சொன்னார். ஈழத்துக்கலைஞர்களோடு, இந்தோனேசியா ,கானா போன்ற வேற்று நாட்டவர்களின் சிறப்பு நடனங்களும் நடைபெற்றது.
எங்களின் திறமைகளை கொண்டு எங்களின் அவலங்களை உலகுக்கு தொடர்ந்து சொல்லிவரும் தமிழர்களின் குரல் அமைப்பின் முயற்சியிக்கு தலை வணங்குகிறேன். இந்நிகழ்வில் சேகரிக்கப்பட்ட பணத்தினையும், போட்டியில் வெற்றி பெற்றதினால் கிடைக்கப்பட்ட பணத்தினையும் உலகத்தமிழர் பேரவை, அவுஸ்திரெலியா மருத்துவ நிதியம் போன்ற அமைப்புக்களுக்கு தமிழர்களின் குரல் அமைப்பினால் பகிர்ந்து வழங்கப்பட்டது.

Wednesday, February 22, 2012

சிட்னியில் நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டியில் எனது அனுபவங்கள்

சென்ற வெள்ளிக்கிழமை சிட்னியில் அவுஸ்திரெலியா சிறிலங்கா அணிக்கு இடையிலே துடுப்பாட்டப் போட்டி ஒன்று நடைபெற்றது. 'தமிழர்களின் குரல்' என்ற இளையோரின் அமைப்பு அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு தரும்படி கேட்டிருந்தது. இந்த அமைப்பில் பெரும்பாலும் அவுஸ்திரெலியாவில் பிறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் தமிழ் மாணவர்களே அதிகமாக இருந்தார்கள். துடுப்பாட்ட மைதானத்துக்கு செல்வதற்கான நுளைவுச்சீட்டு, 'WHOSE SIDE ARE YOU ON?' என்ற வசனம் எழுதப்பட்ட மேலாடை, 'Go Aussi Go' என்று எழுதப்பட்ட கொடி போன்றவற்றை தமிழர்களின் குரல் அமைப்பின் மூலம் பெற்றுக் கொண்டு வேலையில் அரை நாள் விடுமுறை கேட்டுக் கொண்டு துடுப்பாட்டம் பார்க்க சென்றேன்.


என்னுடன் வேலை செய்யும் பெரும்பாலான அவுஸ்திரெலியர்களுக்கு நான் அவுஸ்திரெவுக்கு ஆதரவு என்பது தெரியும் என்பதினால் 'Aussie Aussie Aussie oy oy oy' என்று சொல்லி வாழ்த்தி அனுப்பினார்கள். நான் கொடியுடன் செல்வதைக் கண்ட ஒருவர்( இந்தியர் என நான் அவரை அப் பொழுது நினைத்தேன்) என்னைப் பார்த்து பிழையான கொடியுடன் செல்கிறீர் என்றார். அச்சமயத்தில் எனக்குத் தெரிந்த அயர்லாந்து நாட்டுப் பெண் ஏன் கொடியுடன் செல்கிறீர்கள் என்று கேட்க நான் துடுப்பாட்டம் பார்க்கப் போவதாக சொன்னேன். பிழையான கொடியுடன் நான் செல்வதாக சொன்னவரும் தானும் துடுப்பாட்டம் பார்க்க அன்று செல்லவுள்ளதாக சொன்னார். அப்பொழுது தான் நான் அவர் சிங்களவர் என அறிந்து கொண்டேன். நான் பிறந்த நாட்டில் கிடைக்காத சுதந்திரத்தினை தந்த அவுஸ்திரெலியா நாட்டுக்கே எனது ஆதரவு என்று சொல்லிவிட்டு சென்றேன். நான் கொடியுடன் வருவதைப் பார்த்த வீதிகளில் சென்ற அவுஸ்திரெலியரும் என்னைப் பார்த்து 'Aussie Aussie Aussie oy oy oy' என்று கத்தி ஆதரவு தந்தார்கள்.

சிட்னி மத்திய புகையிரத நிலையத்தில் இறங்கி துடுப்பாட்ட மைதானம் நடைபெறும் இடத்துக்கு செல்ல விசேட பேருந்துக்கள் செல்லும் இடத்தினை நோக்கி சென்றேன். வழியில் அதிகளவு சிங்களவர்கள் தங்களது நாட்டு தேசியக் கொடியுடன் செல்வதைக் கண்டேன். அவுஸ்திரெலியா தேசியக் கொடியுடன் அங்கு நின்ற சில அவுஸ்திரெலியர்கள் என்னைப் பார்த்து எந்த நாட்டுக்கு ஆதரவு என்று கேட்டார்கள். நான் அவுஸ்திரெலியா நாட்டுக்கு என்று சொல்லி எனது கொடியினை உயர்த்திக் காட்டினேன். அதில் ஒரு அவுஸ்திரெலியர் மற்ற அவுஸ்திரெலியரிடம் 'இவர் இந்தியன் போல இருக்கு. அதுதான் சிறிலங்காவுக்கு ஆதரவு கொடுக்கவில்லை' என்றார். நான் உடனே 'நான் பிறந்த இடம் சிறிலங்கா. ஆனால் அது ஒரு இனவாத நாடு. நான் ஒரு தமிழன். இங்கு அவுஸ்திரெலியாவில் தான் எனக்கு நிம்மதியான வாழ்வு கிடைத்தது. இதனால் நான் அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு தருகிறேன்' என்றேன். அவர்கள் உடனே 'Aussie Aussie Aussie oy oy oy' என்று பாடினார்கள்.

பேருந்தில் ஏறும் போது எனக்கு தெரிந்த பாடசாலை மாணவர் உட்பட மூன்று தமிழர்கள் அங்கு வந்தார்கள். அவர்களிடம் தமிழர்களின் குரல் அமைப்பிடமா நுளைவு சீட்டினை வாங்கினீர்கள் என்று கேட்க, இல்லை நாங்கள் விடுமுறைக்கு சிறிலங்காவுக்கு போகிறோம். அதனால் உங்களுக்கு பக்கத்தில் இருக்க மாட்டோம். அதற்கு நான் ' அவுஸ்திரெலியா துடுப்பாட்ட அணிக்கு ஆதரவு குடுத்தால் என்ன பயங்கரவாதமா? ' என்று கேட்டு விட்டு பேருந்தில் ஏறினேன் பேருந்துப் பயண முடிவில் பேருந்தில் இருந்து இறங்கி மைதானத்தினை நோக்கி சென்றேன். பல தமிழர்கள் சிறிலங்காவின் தேசியக் கொடியுடன் சிறிலங்காவுக்கு ஆதரவான உடையுடன் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் என்னை ஒரு வித்தியசமாகப் பார்த்தார்கள். சில நாட்களுக்கு முன்பு தான் அவுஸ்திரெலியாவிற்கே ஆதரவு என்று சொன்ன நியூகாசில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் சிறிலங்கா தேசியக் கொடியுடன் அங்கு வந்தார். என்னைக் கண்டதும் தான் விளையாட்டினை இரசிப்பவன். அரசியலை இங்கு இழுக்கவேண்டாம் என்றார். முன்பதிவு செய்யப்பட்ட எனது இருக்கைக்கு சென்ற போது அங்கே அவுஸ்திரெலியாவுக்கு அதரவு தெரிவித்துக் கொண்டு தமிழர்கள் இருந்தார்கள்.

போட்டி தொடங்கியதும் நாங்கள் அவுஸ்திரெலியா துடுப்பாட்டக் காரர்கள் பந்தினை நன்றாக அடிக்கும் போது எழுந்து நின்று கொடியினை ஆட்டி அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு தெரிவித்தோம்.அப்பொழுது மைதானத்தில் உள்ள திரையில் நாங்கள் அடிக்கடி வந்தோம். நேரடி ஒளிபரப்பு செய்யும் தொலைக்காட்சியில் எங்களைக் காட்டினார்கள்.
ஆனால் எங்களுக்கு பின்னால் பல சிங்களவர்களும் இருந்தார்கள். அவர்கள் இசைக் கருவியினை மீட்டி இசைக்கு ஏற்ப ஆடிக் கொண்டிருந்தார்கள். தமிழர்களில் சிலர் இசைக்கருவிகளை கொண்டு வரும் போது மைதானத்தின் வாசலில் இருந்த காவலர்கள் அந்தத் தமிழர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. கேட்டதற்கு முன்பதிவு செய்திருக்கவேண்டும் என்றார்கள். பல முயற்சிகள் செய்தும் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. முன்பு சிட்னியிலும் கன்பராவிலும் நடைபெற்ற போட்டியில் முன்பதிவு செய்யாமலே இசைக்கருவிகளை மைதானத்துக்கு கொண்டுவர தமிழர்களுக்கு அனுமதி தந்திருந்தார்கள். சிங்களவர்களின் எண்ணிக்கை அங்கே அதிகரிக்கத் தொடங்க திரையில் அவுஸ்திரெலியாக் கொடியும் சிங்களக் கொடியும் அருகருகே இருப்பது போலத் தெரிந்ததினால் நாங்கள் ஆட்கள் இல்லாத இடத்துக்கு சென்று அமர்ந்து அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு தெரிவித்தோம். சிங்கள தேசத்துக்கு அதிகளவான ஆதரவாளார்கள் ஆடிக் கொண்டிருந்ததினாலும், சிங்கள தேசத்து துடுப்பாட்ட அணி அன்று நன்றாக விளையாடியதினாலும் சிங்களவர்களை அதிக நேரம் பிறகு திரையில் காண்பித்தார்கள்.

தமிழர்களின் குரல் அமைப்பு கிட்டத்தட்ட 120 பேருக்கு நுளைவு சீட்டினை விற்றிருந்தது. ஆனால் அங்கே கிட்டத்தட்ட 50, 60 தமிழர்கள் தான் எங்களுடன் இருந்து அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு தந்தார்கள். சில தமிழர்கள் தனியாக இருந்து துடுப்பாட்டம் பார்த்தார்கள். சிலர் குடிப்பதிலேயே நேரத்தினைப் போக்கினார்கள். சிலர் தமிழர்களின் குரல் மூலம் நுளைவுச்சீட்டினை வாங்கி சிங்களத்து ஆடை அணிந்து வந்து சிங்களவனோடு ஆடிக் கொண்டிருந்தார்கள். இதைவிட நூற்றுக்கணக்கான தமிழர்கள் தாங்களாகவே நுளைவு சீட்டினை வாங்கிக் கொண்டு வந்து சிங்கள தேசத்துக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்படியான தமிழர்களில் ஒருவர் எங்களைப் பார்த்து நடுவிரல் காட்டினார். சிங்கள ஆதரவு தெரிவித்த இன்னுமொரு பெண் தமிழர் 'விளையாட்டில் அரசியல் பார்க்கக்கூடாது. சிறிலங்கா பிடிக்காவிட்டால் வேறு எங்கேயும் போய் ஆர்ப்பாட்டம் செய்யுங்கள். இங்கேயேன் வந்தீர்கள்' என்றார். எங்களுடன் இருந்த தமிழர் ஒருவர் அந்தப் பெண்ணைப் பார்த்து 'உனது அப்பாவின் பெயர் பண்டாராவா?' என்று கேட்டார். மாவீரர் குடும்பத்து இளைஞன் ஒருவரும் சிங்கள தேசத்து ஆதரவு உடையுடன் சிங்கள அணிக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்தார். சிறிலங்காவுக்கு விடுமுறை போகப் போகிறோம் என்று பேருந்து தரிப்பிடத்தில் சொன்ன மாணவர்களும் சிங்கள தேசத்து ஆதரவு உடையுடன் நின்றார்கள். அங்கே எங்களைக் கண்டதும் ஒடப்பார்த்தார்கள். எங்களுடன் இருந்த தமிழர் ஓருவர் அவர்களுக்கு அவுஸ்திரெலியா ஆதரவு உடையினை அணிவித்தார். கன்பராவில் இருந்து 300 கிலோ மீற்றர் பயணம் செய்து வந்த ஒரு தமிழ் குடும்பம் எங்களுடன் இருந்து அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு கொடுத்தார்கள்.

சிங்கள தேசத்து பொருட்களை விற்பனை செய்யும் தமிழ்க் கடைக்காரர் எங்களைப் பார்த்து' இவைக்கு வெள்ளைக்காரர்கள் என்று நினைப்பு. இவை என்ன கொடி பிடிச்சாலும் இவை கறுப்பர்கள் தான் . மூளை சலைவை செய்யப்பட்ட கூட்டங்கள் இவை' என்று இன்னுமொரு தமிழருக்கு சொன்னார். சிங்கள அணி அவுஸ்திரெலியாவுக்கு துடுப்பாட்டம் வரும் போது அவர் தனது கடையில் சிங்கள அணிக்கு ஆதரவான ஆடைகளை விற்பவர். அவுஸ்திரெலியாவிற்கு ஆதரவு தரும் எங்களுக்கு சில வெள்ளைக்காரர்கள் ஆதரவு தந்தார்கள்.
போட்டியின் இடையே சிங்கள தேசத்துக்கு ஆதரவு தரும் கூட்டத்தில் இருந்து தமிழீழ தேசியக் கொடியுடன் ஒரு தமிழர் ஒருவர் தோன்றினார். இது பற்றி ஊடகங்களில் படித்திருப்பீர்கள்.

மைதானத்திலும், வீடு செல்லும் போது புகையிரத வண்டியிலும் பல வெள்ளைக்காரர்கள் ஏன் நீங்கள் அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு தந்தீர்கள் என்று கேட்க சிங்கள தேசத்தின் தமிழர்கள் மீதான இன அழிப்பினை அவர்களுக்கு விளங்கப்படுத்தினோம். முள்ளிவாய்க்கால் அவலத்துக்கு முன்பாக ஈழப்போராட்டத்திற்கு ஆதரவாகக் காட்டியும், துடுப்பாட்டத்தின் போது சிங்களத்துக்கு கொடி பிடித்த தமிழர்கள் என்னிடம் அவுஸ்திரெலியாவுக்கு கொடி பிடித்து என்னத்தினை சாதித்தீர்கள், அவுஸ்திரெலியா படுதோல்வி அடைந்திருக்கிறது என்றார்கள். அவுஸ்திரெலியா வென்றாலும் தோற்றாலும் நான் தமிழ் அவுஸ்திரெலியன். நான் சிறிலங்கன் அல்ல. கொடி பிடிக்கப் போய் சில வெள்ளைக்காரர்களுக்கு எங்களது அவலங்களை சொல்ல முடிந்ததே என்ற திருப்தி எனக்கு கிடைத்தது. இந்த திருப்தியை எவ்வளவு காசு கொடுத்தாலும் வாங்க முடியாது.

மைதானத்தில் சிட்னி துடுப்பாட்ட உறுப்பினர்கள் அமர்ந்து துடுப்பாட்டத்தினைப் பார்வையிட தனியிடம் இருக்கின்றது. விண்ணப்பித்து 15, 20 வருடங்களின் பின்பு தான் உறுப்பினராக முடியும். அந்த உறுப்பினர்கள் அமைந்திருக்கும் இடத்திற்கு நாங்கள் செல்ல முடியாது. ஆனால் யாராவது தெரிந்த உறுப்பினர் இருந்தால் அவருடன் நாங்கள் செல்லலாம். சிறிலங்கா தூதுவராலயத்தினை சேர்ந்தவர்களுக்கு விசேட அனுமதி அங்கே இருக்கிறது. அங்கே போர்க்குற்றவாளியும் முன்னாள் கடற்படை தளபதியுமான அவுஸ்திரெலியாவுக்கான சிறிலங்கா தூதுவர் திசாரா சமரசிங்க உட்பட சில தூதுவராலயத்தினை சேர்ந்தவர்களும் இருந்தினை வீடு வந்து சேர்ந்தபின்பு தான் அறிந்தோம். தமிழ்க் கவுன்சிலர் ஒருவரும் அங்கே இருந்து சிங்களத்தில் தூதுவராலய அதிகாரி ஒருவருடன் சிங்களத்தில் கதைத்துக் கொண்டு துடுப்பாட்டத்தினை இரசித்துக் கொண்டிருந்தாகவும் அறிந்தோம். யார் சிங்கள அணிக்கு ஆதரவு கொடுத்தாலும் நான் தொடர்ந்து அவுஸ்திரெலியாவிற்கே ஆதரவு கொடுப்பேன். எனென்றால் நான் சிறிலங்கனல்ல. நான் தமிழ் அவுஸ்திரெலியன்.

Thursday, January 26, 2012

சிட்னியில் நடைபெற்ற திருமண நிகழ்வு

அண்மையில் சிட்னியில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றுக்கு சென்றிருந்தேன். மணமகன் சிட்னியில் சிறந்த கலைஞர்களில் ஒருவர். தான் பெற்ற கலை மூலம் உலகமெங்கும் சென்று நிகழ்ச்சி நடாத்தி தாயகத்தில் இருக்கும் உறவுகளுக்கு உதவி செய்து வருபவர். வன்னித் தடுப்பு முகாம்களில் அடைபட்டு இருந்த 3 இலட்சம் தமிழர்களின் நிலையினை அவுஸ்திரெலிய மக்களுக்கு அறியச்செய்வதற்காக சிட்னியில் இருந்து கன்பரா வரை உள்ள 300 கிலோமீற்றர் தூரத்தினை தனது நண்பருடன் நடந்து சென்றவர்.

பகல் பதினொரு மணியளவில் மணமகன் குதிரை வண்டியில் ஏரிக்கரை ஒரத்தில் இருக்கும் பூங்காவில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட கொட்டகையில் மணத்தோழனுடன் வந்து இறங்கினார். மூன்று தலைமுறைக்கு முன்பாக வலிகாமம் வடக்கில் திருமண நிகழ்வுக்கு குதிரை வண்டியில் தங்களது பரம்பரையில் மணமகன்கள் வருவது வழக்கம், அதே போல மணமகன் வர வேண்டும் என மணமகனின் பாட்டியார் விரும்பியதினால் மணமகன் குதிரை வண்டியில் வந்தார். நாதசுரம், மேளவாத்தியங்கள் வாசிக்கப்பட மணமகன் மேடைக்கு வந்து அமர்ந்தார். மேடைக்கு அருகில் இருக்கும் ஒலிவாங்கியில் திருமண நிகழ்வு பற்றி, அதை முன்னெடுத்துச் சென்றவர் தமிழில் சொல்லிக் கொண்டிருந்தார். வழமையாகத் திருமண நிகழ்வுகளில் காணப்படும் தேவையற்ற சடங்குகள் இத்திருமண நிகழ்வில் இல்லை. ஆனால் சம்பிரதாயங்கள் பேணப்படும் என்று சொன்னார். மேடையில் ஐயர் ஒருவரையும் காணவில்லை. இதனால் வழமையான திருமண நிகழ்வுகளில் ஐயர்மார்களினால் சொல்லப்படும் பொருள் விளங்காத வட மொழி இங்கு உச்சரிக்கப்படவில்லை.

மணமகனின் தகப்பனார் தேங்காய் உடை த்ததும், மணமகனுக்கும் தோழனுக்கும் தலைப்பாகை கட்டும் நிகழ்வு நடைபெற்றது. பொதுவாக ஈழத்தில் பிறந்த பலர் சிட்னியில் தங்களது திருமணத்தின் போது வட இந்திய உடைகளை அணிவது வழக்கம். ஆனால் புலம் பெயர்ந்த நாட்டில் பிறந்த இந்த மணமகன் வேட்டி அணிந்திருந்தார். சால்வையினைக் கொண்டு மணமகனுக்கும் தோழனுக்கும் தலைப்பாகை இங்கு அணிவிக்கப்பட்டது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் வரும் உதயன் பத்திரிகையில் மாப்பிள்ளைகளின் சீதனப் பட்டியலின் விபரங்கள் வெளியாகி இருந்தன. பெரும்பாலான ஆண்கள் தன்னைப் பற்றி நினைப்பதில்லை. ஆனால் தனக்கு வருபவர் இப்படி இருக்கவேண்டும் அப்படி இருக்கவேண்டும். அத்துடன் முக்கியமாக கொழுத்த சீதனம் தரப்பட வேண்டும். சிங்கள அரசு, தமிழர் தயாகத்தினை முற்று முழுதாக கைப்பற்றிய பின்பு தாயக விடுதலைக்காக அர்ப்பணித்த பெண்கள் பலரினை சமுகம் ஒதுக்கி வைத்திருப்பதாக ஊடகங்களில் சில செய்திகள் வந்தன. சிலரை அவர்களின் குடும்பங்களே கண்டு கொள்வதில்லை எனவும் செய்திகள் வந்தன. ஆனால் வன்னியில் இருந்து பெண் ஒருவரைத் தேடிக் கண்டு பிடித்து சிட்னிக்கு அழைத்து, மணமகளாகக் கைபிடிக்க முனைந்தார் புலம் பெயர்ந்த நாட்டில் பிறந்த இந்த மணமகன். மணமகனுக்குத் தலைப்பாகை அணிவிக்கப்பட்டதும், வெவ்வேறு வயதுடைய 28 தோழிகளுடன் மணமகள் மேடைக்கு வந்தார்.

மே 19 2009க்கு முன்பு விடுதலைப்புலிகளை உயர்வாகப் பேசியவர்களில் சிலர் இப்பொழுது விடுதலைப்புலிகளைத் தாழ்த்திப் பேசுகிறார்கள். அவர்களின் தியாகங்களை கொச்சைப் படுத்துகிறார்கள். முன்பு ஊடகங்களில், மேடைகளில் , பொதுவிடங்களில் புலிகளை உயர்வாகச் சொன்ன இவர்கள் மே 2009க்குப் பிறகு வந்த மாவீரர் தினங்களில் கலந்து கொள்வதில்லை. மாவீரர்களின் தியாகங்களை நினைத்துப் பார்ப்பதில்லை. மணமகள் மேடைக்கு வந்ததும் மாவீரர்களை நினைத்து அகவணக்கம் செய்யப்பட்டது.

திருமண நிகழ்வை முன்னெடுத்துச் சென்றவர், தாலி பற்றி ஒரு அறிமுகம் கொடுத்தார். அன்பின் சின்னமாக, அடையாளமாக அணிவிக்கப்படுவது தாலி. இது வேலி என்ற கருத்து தேவையற்றது. வேலி, எம் மனதில் போடவேண்டியது, கழுத்தில் அணியப்படுவதல்ல என்று அவர் கூறியதுடன் திருமண நிகழ்வுக்கு வந்திருந்தோர் தாலியை வாழ்த்தும் நிகழ்வு நடைபெற்றது. அதே வேளை ஓதுவார் ஒருவரால் பஞ்ச புராணம் ஓதப்பட்டது. தொடர்ந்து மணமகன் அளிப்பும் மணமகள் அளிப்பும் இடம்பெற்றன. திருமணம் பற்றி தேசியத்தலைவர் சொன்ன "ஆணும் பெண்ணும் ஒத்திசைவாக ஒருவர் ஒருவரின் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் கௌரவத்தையும் மதித்து, குடும்ப வாழ்வின் பொறுப்புகளைப் பகிர்ந்து, சமுகத்தின் மேம்பாட்டிற்கு உழைத்து, பரஸ்பர புரிந்துணர்வுடன் பற்றுக் கொண்டு வாழ வேண்டும்" என்ற கூற்றினை திருமண நிகழ்வை முன்னெடுத்துச் சென்றவர் சொன்னார். முள்ளிவாய்க்கால் அவலம் வரை தாயகத்தில் அங்குள்ள மக்களுக்கு உதவிய தமிழர் ஒருவர் தேங்காய் உடைக்க, மறைந்த மாமனிதர் தில்லை ஜெயக்குமார் அவர்களின் துணைவியார் ஆசீர்வதிக்கப்பட்ட தாலித்தட்டை ஏந்தி நிற்க, அவர் முன்னிலையில், தாயகத்துக்கு அதிகளவு உதவி செய்யும் தம்பதியினர் தாலியினை எடுத்து மணமகனுக்கு வழங்க, வீரச்சாவடைந்த மாவீரர்களையும், அரச படைகளாலும் இரண்டகராலும் கொல்லப்பட்ட மக்களையும் நாட்டுப்பற்றாளர்களையும் நினைவுகூரப்பட்டவேளையில் மணமகனால் மணமகளுக்கு தாலி கட்டப்பட்டது.

திருமண நிகழ்வில் "பொங்கிடும் கடற்கரை ஒரத்திலே மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே மங்களம் தங்கிடும் நேரத்திலே எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே " ,"தென்னங்கீற்று தென்றல் வந்து மோதும் – என் தேசமெங்கும் குண்டு வந்து வீழும் கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும் – அவள் கையில் கூட ஆயுதங்கள் ஏறும்" போன்ற தாயக விடுதலை கீதங்களை அழகாக நாதசுர இசையில் காதுக்கு இனிமையூட்டினார் நாதசுரக் கலைஞர். மக்கள் பெற வேண்டிய பேறுகள் பதினாறு. காளமேகப்புலவர் இப்பதினாறு பேற்றையும் இறைவனிடம் வேண்டிப்பாடிய பாடலை கூறி அழகாக அந்த பதினாறு பேறுகளும் எவை என விளக்கம் தந்தார், திருமண நிகழ்வை முன்னெடுத்துச் சென்றவர். அவையாவன புகழ், கல்வி, வீரம், வெற்றி, நன்மக்கள், துணிவு, செல்வம், உணவுத்தானியம், நல்லூழ், இன்பம், அறிவு, அழகு, பெருமை, அறம், நோயின்மை, நீண்ட ஆயுள்.

மணமகன் மணமகளுக்கு குங்குமப் பொட்டிட, மணமக்கள் மாலை மாற்ற, பெற்றோர், பெரியோர், வந்திருப்போர் நேரில் சென்று மணமக்களை வாழ்த்த சுவையான மதிய போசனத்துடன் திருமண நிகழ்வு ஒன்று முப்பது மணியளவில் முடிவுற்றது. வன்னியில் எத்தனையோ பெண்கள் திருமணவயது வந்தும் மாப்பிள்ளைகள் கிடைக்காமல் வாழ்கிறார்கள். இந்த மணமகன் முன்னெடுத்துச் செய்தது போல, புலம் பெயர்ந்த நாட்டில் வாழும் பல இளைஞர்கள், மணம் செய்ய எண்ணும் போது, வன்னிவாழ் பெண்களை வாழ்க்கைத் துணையாக்க முன்வருவார்களா?.

Monday, November 29, 2010

ஊடகவியலாளர் சிவநாயகம் அவர்கள் தனது 80 வது அகவையில் காலமாகிவிட்டார்.


இவர் யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொக்குவில் இந்துக்கல்லூரியிலும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் கல்வி கற்றார். கல்வியை முடித்ததும் ஊடகத்துறையில் சேர்ந்து டெய்லி நீயூஸ், டெய்லி மிரர் போன்ற பத்திரிகையில் கடமையாற்றினார். இவ்வூடகங்களில் வந்த இவரது ஆக்கங்களினால் இலங்கை முழுவதும் புகழ்பெற்ற ஊடகவியலாளர் என்ற பெயரைப் பெற்றார். இக்காலத்தில் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஆரம்பிக்க சிவநாயம் அவர்கள் யாழ்ப்பாணம் வந்து யாழ்ப்பாணத்தில் 'Saturday Review' என்ற ஆங்கிலப் பத்திரிகையை நடாத்தி அதில் தமிழர்களின் சுதந்திர வேட்கையைப் பற்றிய ஆக்கங்களை எழுதினார். இதனால் இவரது பத்திரிகை நிலையம் சிறிலங்கா இராணுவத்தினால் எரியூட்டப்பட்டது. இதனால் தமிழகத்துக்கு அகதியாகச் சென்று அங்கு தமிழ் தகவல் மையத்தில் வேலை செய்தார். தமிழ் நேசன் என்ற பத்திரிகையை தமிழகத்தில் நடாத்தினார். அப்பத்திரிகையில் தமிழர்களின் போராட்டங்களை எழுதினார். இதனால் இந்திய அரசு இவரை தடாச் சட்டத்தில் சிறையில் அடைத்தது. சிறையில் நோய்வாய்ப்பட்டு இருந்த சிவ நாயகம் அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளை கிடைக்க இந்திய அரசு அனுமதி வழங்கவில்லை. மேலும் நோய் அதிகரிக்க, நிபந்தனையின் படி இவருக்கு சிறையில் இருந்து விடுதலை கிடைக்க பிரான்சு நாட்டில் அடைக்களம் பெற்றார். புலம் பெயர்ந்தாலும் கொடிய நோய்க்கு மத்தியிலும் 'Hot Spring' என்ற பத்திரிகையை ஆரம்பித்து அதில் தமிழர்களின் போராட்டத்தினைப்பற்றி எழுதினார். 2005ல் கொழும்பில் நோய் முற்றிய நிலையிலும் எழுதிய புத்தகம் தான் 'Sri Lanka: Witness To History' .இவர் முன்பு எழுதிய மற்றொரு புத்தகம் - 'Pen And Gun'. சுப்பிரமண்யம் சிவநாயகம் அவர்கள் தனது 80 வது அகவையில் காலமாகிவிட்டார்.

Monday, November 8, 2010

சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரெலியாவுக்கும் சிறிலங்கா அணிக்கும் இடையிலான துடுப்பாட்டம்


சிட்னியில் சென்ற வெள்ளிக்கிழமை அவுஸ்திரெலியாவுக்கும் சிறிலங்கா அணிக்கும் இடையிலான இரண்டாவது துடுப்பாட்டப் போட்டி நடைபெற்றது. தமிழர்களின் குரல் என்ற அமைப்பு அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் படி கேட்டுக்கொண்டது. நானும் கலந்து கொள்ள வேலையில் விடுமுறை கேட்டேன். சிறிலங்காவுக்கு ஆதரவு தெரிவிக்கவா செல்கிறீர்கள் என்று என்னுடன் வேலை செய்யும் அவுஸ்திரெலியர்கள் சிலர் கேட்டார்கள். இல்லை நான் அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு கேட்கவே செல்கிறேன். சிறிலங்காவில் பிறந்து ஏன் அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு கேட்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் சிறிலங்காவில் தமிழனாகப் பிறந்தேன். தமிழன் என்ற காரணத்தினால் சிறிலங்காவில் தமிழர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஆனால் அவுஸ்திரெலியாவில் தமிழன் சுதந்திரமாக இருக்கலாம். சிறிலங்காவில் இல்லாத சுதந்திரத்தை எனக்குத் தந்த அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவாகவும் எங்களை அழிக்க நினைக்கும் சிறிலங்காவுக்கு எதிராகவும் குரல் கொடுக்க நான் கலந்து கொள்கிறேன் என்று சொன்னேன். அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு கொடுப்பதினால் தங்களுக்கும் மகிழ்ச்சி. நன்றிகள் என்று என்னுடன் வேலை பார்க்கும் அவுஸ்திரெலியர்கள் சொன்னார்கள்.
நானும் வெள்ளிக்கிழமை துடுப்பாட்டம் பார்க்கத் தயாரானேன். எதிர்ப்பாராத விதமாக உறவினர் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருப்பதினால் அவரைப் பார்க்கவேண்டி இருந்தது. இதனால் நான் பகலில் துடுப்பாட்டம் பார்க்கச் செல்ல முடியவில்லை. பல இளையோர் துடுப்பாட்டம் பார்க்க சென்றார்கள். சிங்கள அரசு தமிழர்களை சர்வதேச விதிமுறைகளை மீறிக் கொல்லுவதைக் காண்பிக்கும் குண்டு ஒன்றினை வீசும் பந்து வீச்சாளரின் படம் உடைய படத்தை உடைய மேலாடைகளை அணிந்தவண்ணம் சென்றார்கள்.


ஆனால் காவல்துறையினர் இந்த ஆடையினை அணிந்து உள்ளே செல்லக்கூடாது. உள்ளே யாராவது அணிந்து இருந்தால் அவர்களுக்கு 5000 வெள்ளி அபாராதம் கட்டவேண்டும் என்றும் சொன்னார்கள். இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, மெல்பேர்ணிலும் சிறிலங்கா துடுப்பாட்ட அணிவரும் பொழுது சிறிலங்காவின் மனித உரிமைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களைத் தமிழர்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் அவ்வார்ப்பாட்டங்கள் மைதானங்களுக்கு வெளியேதான் நடைபெற்றன. மைதானத்துக்கு உள்ளே நடைபெறவில்லை. சிட்னி துடுப்பாட்ட மைதானத்துக்கு செல்வதற்கு மைதானத்தைச் சுற்றிவர பல வாசல்கள் இருக்கின்றன. குறிப்பிட்ட வாசலில் ஆர்ப்பாட்டம் செய்தால் எல்லாப்பார்வையாளர்களும் ஆர்ப்பாட்டத்தைப் பார்க்க மாட்டார்கள். மைதானத்துக்கு வெளியில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் தொலைக்காட்சியிலும் காண்பிக்கமாட்டார்கள்.
நான் சென்ற போது நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. போட்டி இடை நிறுத்தப்பட்டு இருந்தது. பல பார்வையாளர்கள் இனிமேல் போட்டி நடைபெற மாட்டாது என நினைத்து மைதானத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள். இவ்வளவு தூரம் வந்திவிட்டேன். போய்ப்பார்ப்போம் என்று நினைத்து மைதானத்துக்குள் சென்றேன். சில நிமிடங்களின் பின்பு மழை விட்டதும் மீண்டும் போட்டி ஆரம்பமானது. அவுஸ்திரெலியா அணிக்கு ஆதரவாக தமிழர்கள் கொடிகாட்ட அருகில் சிங்களவர்கள் சிங்களக் கொடியுடன் சிங்களதேசத்துக்கு ஆதரவு கொடுத்தார்கள். வாத்தியக்கருவிகளுடன் சில தமிழர்கள் இசை பொழிய, அவுஸ்திரெலியாத் துடுப்பாட்டக்காரர்கள் 4, 6 ஓட்டங்கள் பெறும் போது தமிழர்கள் எழுந்து ஆடினார்கள்.

இளையோர் ஒருவரைப் பார்த்து அவுஸ்திரெலியர் ஒருவர், நீங்கள் அவுஸ்திரெலியாவில் பிறந்தீரா என்று கேட்டார். ஆம் என்று அந்த இளைஞன் பதில் அளிக்க, வெள்ளைக்காரர் தமிழ் புலியா என்று சிரித்துக் கொண்டு கேட்க, இளைஞரும் ஆமாம் நான் தமிழ் புலி என்றார். வெள்ளைக்காரரும் அவ்விளைஞருக்கு கை கொடுத்தார். என்னைப் பார்த்து ஒரு வெள்ளைக்காரர், இசை வாத்தியங்களுடன் ஆடிப்பாடி தமிழர்கள் ஆடி அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு தருவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். சிறிலங்காவில் தமிழனாகப் பிறந்ததினால் பல தமிழர்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. தமிழன் என்ற காரணத்தினால் சிறிலங்காவில் தமிழர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. ஆனால் அவுஸ்திரெலியாவில் தமிழன் சுதந்திரமாக இருக்கலாம். இங்கு திறமைக்குத் தான் முதலிடம் கொடுக்கப்படுகிறது. சுதந்திரம் என்றால் என்ன என்பதை இங்கு தான் காண்கிறேன். இதனால் நாங்கள் அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு கொடுக்கிறோம். அதற்கு வெள்ளைக்காரர் " உண்மையில் சுதந்திரமாக வாழக்கூடிய நாடுகளில் அவுஸ்திரெலியாவும் ஒன்று" என்றார். இடையில் இரு சிங்களவர்கள் சிங்களக் கொடியுடன் வந்து எங்களைக் குழப்ப வந்தார்கள். காவல்துறையினர் அவர்களை அங்கிருந்து அகற்றிவிட்டார்கள். ஒரு வெள்ளைக்காரர்கள் எங்களை அடிக்கடி புகைப்படம் எடுத்தார். அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவு தருவது மகிழ்ச்சி என்றார். மீண்டும் மழை அதிகம் குறுக்கிட போட்டி இடை நிறுத்தப்பட்டது. அவுஸ்திரெலியாவின் வெற்றிவாய்ப்பு குறைந்ததினால் அங்கிருந்து வீடு நோக்கிச் சென்றோம்.

இந்தப் போட்டியினைப் பார்க்க பல தமிழர்கள் வந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் எங்களுடன் சேராமல் சிங்கள அணிக்கு ஆதரவு தந்தார்கள். சிலர் சிங்களத் தேசியக் கொடியினையும் வைத்திருந்தார்கள். இவர்களில் சிலர் சிங்கள இனவெறியைக் காட்டி அவுஸ்திரெலியாவில் அடைக்கலம் பெற்றவர்கள். அவுஸ்திரெலியாவில் எல்லாச் சலுகைகளும் பெற்றுக் கொண்டு சிங்கள நாடு நல்லது என்று சொல்பவர்கள். ஒரு சிலர் தமிழீழம் வேண்டும் என்று முன்பு கத்தியவர்கள். துடுப்பாட்டத்தில் சிங்களத்துக்கு ஆதரவு வழங்குகிறார்கள். எனினும் எனக்குச் சுதந்திர வாழ்க்கையினைத் தந்த அவுஸ்திரெலியாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தேன் என்ற திருப்தியுடன் வீடு நோக்கிச் சென்றேன்.

Wednesday, May 26, 2010

ஈழத்தமிழர்கள் பெரும்பாலோருக்கு, சாகும் வரை இருக்கும் இந்த வலி

தமிழன் தமிழ் நாடு, ஈழத்துக்கு வெளியே பர்மா, இந்தோனேசியா, கம்போடியாவிலும் ஆண்டிருக்கிறான். ஈழத்தில் தமிழர்கள் கடந்த 300 வருடங்களாக மதம் பரப்பவும் களவெடுக்கவும் வந்த போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள், பிரித்தானியார்களினால் அடிமையாக்கப்பட்டு பின்பு சிங்களவர்களின் கீழ் அடிமையானார்கள்.பண்டாரவன்னியன் பிறந்த வன்னி மண்ணில் மீண்டும் தமிழர்களின் ஆட்சி நடைபெற்றது. அங்கே மக்கள் சுதந்திரமாக வாழ்ந்தார்கள். செம்மொழி மகாநாடு நடாத்தும் கலைஞரின் ஆட்சியில் இல்லாத தமிழ், இந்த வன்னி மண்ணில் தான் இருந்தது. சுவையகம், வெதுப்பகம் என்று எங்கும் தமிழாக இருந்தன. அந்த மண்ணின் கடவுள்களாக இருந்தவர்களின் பலரது பெயர்கள் தூய தமிழில் எழிழன், இளங்குமரன், தமிழினி என்று இருந்தன. நீதித்துறை, காவல்துறை, நிதித்துறை என்று எல்லாவற்றிலும் தமிழ் இருந்தது.

கால்படை, கடற்படை, விமானப் படையுடன் தமிழர்கள் ஆண்ட அந்த மண்ணை நயவஞ்சக சகுனி காந்தி தேசம், பாகிஸ்தான், சீனா, மேற்கு நாடுகள் துணையுடன் சிங்களதேசம் ஈவு இரக்கமின்றி அழித்துக் கொண்டிருந்தது. மரங்களைத் தறித்தால் குற்றம் என்று சொல்லும் உலக நாடுகள் இங்கே குழந்தைகள், பெண்கள், வயோதிபர் உட்பட அனைவரும் கொன்று அழிக்கப்படும் போது வேடிக்கை பார்த்தன. வயது வேறுபாடின்றி சித்திரவதை செய்யப்பட்டு அங்கு தமிழர்கள் இறக்க, பெண்கள் சிங்களப் படைகளுக்கு இரையாகிப் போக அதைத் தடுக்க புலம் பெயர்ந்த தமிழர்களும், தமிழக தமிழ் உணர்வாளர்களும் நியூயோக், சிட்னி, இலண்டன், பாரிஸ், சூரிச், தமிழகம் போன்ற இடங்களில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் என நடாத்தியும் உலகம் கண்டு கொள்ளவில்லை. முத்துக்குமார் தொடங்கி முருகதாஸ் வரை தங்களது உடலுக்கு தீ மூட்டி அழித்துக்காட்டியும் உலகம் கண்டு கொள்ளவில்லை. சரணடையுங்கள் என்று தமிழர் தரப்பை மட்டும் உலகம் கேட்டது. கபட நாடகதாரி கருணாநிதியோ, சோனியாவின் மடிப்பிச்சைக்காக 2 மணித்தியாலம் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்ததினால் போர் நிறுத்தம் ஏற்பட்டது என்று தமிழகத்து மக்களின் எழுச்சியை திசை திருப்ப முயன்றார். கோமாளிகள் என்று சரத் பொன்சேகாவினால் பட்டம் பெற்றவர்களும் தேர்தல் வர ஈழத்துப்பிரச்சனையை தங்களின் அரசியல் இலாபத்துக்குப் பயன் படுத்தினார்கள். இந்நிலையில் சென்ற வருடம் மே மாதம் 18ம் திகதி சிங்களம் வெற்றி பெற்றதாக அறிவித்தது. சரணடைந்த தமிழர்கள் சிறைகளில் சித்திரவதைகள் அனுபவித்து இறந்து கொண்டிருக்க , தமிழர்களுக்கு பொலிப் புத்திமதி சொன்ன நாடுகள் இப்பொழுது இறந்த வீட்டில் என்ன பிடுங்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கின்றன.



கடந்த 30 வருடங்களாக சிங்களம் தமிழனை அழிக்க உயிர்தப்பி ஓடி ஒளிந்து வெளினாடுகளுக்கு தப்பிய பல்லாயிரக்கணக்கான தமிழர்களில் நானும் ஒருவன். இந்த 30 வருட சிங்களப் பயங்கரவாத அரசின் நடவடிக்கைகளினால் பல தமிழர்களின் பெற்றோர்கள், சகோதர சகோதரிகள், பிள்ளைகள், உறவுகள் எல்லாம் வெவ்வேறு நாடுகளிலும் சிறைகளிலும் பிரிந்து சிதறிப் போய் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பலரது உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா, எங்கு இருக்கிறார்கள் என்று கூடத் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கல்வி, தொழில், காதல்,கல்யாணம்,பழக்க வழக்கம், கலாச்சாரம் எல்லாவற்றையும் இந்த 30 வருட சிங்களப் பயங்கரவாதம் தான் தீர்மானித்தது. ஆனாலும் எங்களுக்கு ஒரு நிலம் இருக்கிறது என்று நம்பிக்கையோடு வாழ்ந்தோம். ஆனால் சென்ற வருடம் மே மாதம் 18ம் திகதியுடன் சிறுசு சிறுசாகக் கட்டிய அந்தக் கோட்டை, கொத்தணிக்குண்டுகளினாலும், நச்சு வாயுக்களிலும் அழிக்கப்பட்டு விட்டது.

சென்ற வருடம் மே 18ம் திகதிக்குப் பிறகு புலம் பெயர்ந்த நாடுகளில் எம்மவர்களில் பலர் மன அழுத்தத்துடன் வாழ்கிறார்கள். அந்த சம்பவங்களை மறக்க முயற்சித்தாலும் முடியாமல் தவிக்கிறார்கள். திரைப்படம்,சர்வதேச துடுப்பாட்டம், சுற்றுலா என்று வேறு விடயங்களில் ஆர்வம் காட்டி இந்த மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சித்தாலும் இடை இடையே ஊடகங்களில் வரும் செய்திகள், தெரிந்தவர்களுடன் கதைக்கும் போதும் மீண்டும் தவிக்கிறார்கள். நித்திரை கொள்ளும் போதும் இடையிடையே அந்த சம்பவங்கள் நினைவில் வந்து தூக்கத்தைக் கெடுக்கின்றன. இந்தத்தலைமுறையில் உள்ள ஈழத்தமிழர்கள் பெரும்பாலோருக்கு, அவர்கள் சாகும் வரை இந்த வலி வந்து கொண்டே போகும்.

சென்ற கிழமை 18ம் திகதி சிட்னி மாட்டின் பிளேசில் நடைபெற்ற முதலாவது ஆண்டு கோர இன அழிப்பு கவனயீர்ப்பில் கலந்து கொண்டேன். பயங்கரக் குளிர், தொடர்ந்து பெய்யும் மழைக்கு மத்தியில் நடைபெற்ற அந்நிகழ்வில் கறுப்பு உடை அணிந்து பெரும்பாலும் எல்லாக் கவனயீர்ப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் குறிப்பிட்ட தமிழர்கள் அங்கும் வந்திருந்தார்கள். பச்சைக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட சிலர் அங்கு உரையாற்றினார்கள். கொட்டும் மழையில் குடை பிடித்துக் கொண்டு நிகழ்ச்சி முடியும் வரை அங்கு நின்ற மக்கள் தமிழ் மொழிக்காக இறந்த மாவீரர்களுக்கும், மக்களுக்கும் அஞ்சலி செய்தார்கள். இவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம், தாயகத்துக்கு உதவுவதன் மூலம் இந்த மன அழுத்தத்தை ஒரளவு குறைக்கலாம்.

Friday, April 16, 2010

வன்னியில் அங்கவீனப்பட்டவர்களுக்கு உதவி புரிவதற்காக சிட்னியில் நடைபெற்ற 'ஆஞ்சநேயம்' நிகழ்வு


சிட்னிக்கு தனது நான்கு வயதில் புலம் பெயர்ந்தவர் செல்வி உமா புவனேந்திரராஜா. இவருக்கு 16 வயது இருக்கும் போது ஏற்பட்ட நோய் காரணமாக இவரது பார்வையில் குறைபாடு ஏற்பட்டது. நோயின் காரணத்தினை வைத்தியர்களினாலும் கண்டு பிடிக்க முடியவில்லை. எனினும் தனது கல்வியை தொடர்ந்து படித்து பட்டதாரியானார். சிலவருடங்களின் பின்பு முல்லைத்தீவில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது பாதிக்கப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட எம்மவர்களுக்கு உதவி புரிவதற்காக மனிதாபிமானம் உள்ள புலம் பெயர் வாழ் தமிழர்கள் வன்னி சென்றார்கள். இவர்களைப் போல வன்னி சென்ற உமா, அங்கங்களை இழந்தவர்கள், பார்வையற்றவர்கள், காது கேட்காதவர்கள் போன்றவர்களுக்கு உதவி செய்வதற்காக வன்னியிலே தங்கிவிட்டார். அவர்களுக்கு கல்வி, கணணி கற்பித்தார். வன்னியில் மீண்டும் போர் வெடித்தது. மக்கள் இடம் பெயர்ந்தார்கள். கண் முன்னால் இறந்தவர்கள், காயப்பட்டவர்கள் மத்தியில் உயிர் தப்பி முள்ளிவாய்க்காலுக்கு மக்களோடு மக்களாகச் சென்றார். அங்கும் இறப்பவர்கள், காயப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது. அங்கும் உயிர் தப்பி 2009 மே மாதம் நடுப்பகுதியில் மெனிக் பாம் என்ற முகாமுக்கு வருகிறார்.தாயகத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் பின்பு, அவுஸ்திரெலியா சிட்னியில் இருந்து வன்னி சென்று அங்குள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக சிட்னி திரும்பாத மற்றைய இரு தமிழ் அவுஸ்திரெலியர்களுடன் மெனிக் பாமில் சில நாட்கள் இருந்தபின் அங்கிருந்து ஒருவாறு வெளியே வந்து, பல இன்னல்கள் மத்தியில் சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் சிட்னி வந்தடைந்தார்.

பிரித்தானியாவில் பிறந்து மிகவும் சிறு வயதில் பெற்றோருடன் அவுஸ்திரெலியா சிட்னிக்கு குடிபெயர்ந்தவர் சேரன் சிறீபாலன். தமிழ் நாட்டில் அடையாரில் வசிக்கும் புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் திரு தனஞ்சேயன் அவர்களிடம் பரத நாட்டியம் கற்றார். சிட்னியில் "இரசனா" என்ற நடனப் பள்ளியை நடாத்தி வருகிறார். தாயகத்தில் இருக்கும் எம்மக்களுக்கு எதாவது செய்யவேணும் என்ற துடிப்புடன் இருக்கும் இவர் 2006, 2007, 2008ம் ஆண்டுகளில் "நவம் அறிவுக்கூடத்தில்" இருந்த போரிலே உடல் உறுப்புக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நாட்டிய நிகழ்ச்சியினை நடாத்தினார். இதில் 3 வருடங்களும், இவருக்கு கிடைத்த கிட்டத்தட்ட 70000 அவுஸ்திரெலியா வெள்ளிகளை நவம் அறிவுக்கூடத்துக்கு அனுப்பினார். 2009ல் வன்னியில் கடும் போர் ஏற்பட்டதினால் அங்குள்ளவர்களுக்கு உதவி புரிய முடியாத நிலமை ஏற்பட்டது. இதனால் அவர் 2009ல் நாட்டிய நிகழ்ச்சியை நடாத்தவில்லை. எனினும் வன்னி தடுப்பு முகாம்களில் இருந்த 3 இலட்சம் உறவுகளுக்காக, விஸ்ணா சிவராஜா என்ற அவுஸ்திரெலியாவில் பிறந்த தமிழ் இளைஞனோடு சிட்னியில் இருந்து கன்பராவை நோக்கி கிட்டத்தட்ட 300 கிலோ மீற்றர் தூரத்தை கால் நடையாக நடந்து முடித்தார். அவுஸ்திரெலியா அரசு, ஊடகங்கள், மக்களுக்கு இந்த 3 இலட்சம் உறவுகளின் நிலமையைச் சொல்லி சம்பந்தப்பட்ட தரப்பிற்கு அவுஸ்திரெலியா அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இவர்கள் நடந்தார்கள்.

2009ல் நடந்த கொடூர யுத்தத்தின் பின்பு, வன்னி மக்களில் காயம் ஏற்படாமல் தப்பியவர்கள் பலர் கிடைக்கிற உதவிகளை வைத்து தங்களைப் பார்க்ககூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் யுத்தத்தினால் உடல் உறுப்புக்களை இழந்தவர்கள் பலர் தங்களைப் பார்ப்பதற்கு முடியாமல் இருக்கிறார்கள். அரசாங்கம், தொண்டு நிறுவனங்கள், புலம் பெயர்ந்த நாடுகளில் இருக்கும் நல்ல உள்ளங்கள் அனுப்பும் பணங்கள் இவர்களுக்கு போதாமல் இருக்கின்றன. ஒரு குடும்பத்துக்கு கிட்டத்தட்ட ஒரு மாதசெலவுக்கு 120 அவுஸ்திரெலியா வெள்ளிகள் தேவைப்படுகின்றன. வன்னியில் விற்பனையாளர்கள் பொருட்களை கொள்ளை விலைக்கு விற்று அதிக இலாபம் அடைகிறார்கள். வன்னியில் நேரில் பார்த்த இந்த மக்களுக்கு எப்படியாவேனும் உதவி செய்யவேண்டும் என்று உமா அவர்கள், உதவி செய்யக்கூடிய மனம்படைத்த சிட்னிவாழ் சிலருடன் கலந்துரையாடலை மேற்கொண்டார். சிலர் மதிய போசன உணவு நிகழ்வொன்றினை நடாத்தி அதில் கிடைக்கும் பணத்தினை அனுப்பலாம் என்றார்கள். மாதமாதம் தங்களால் இயன்ற பணத்தை வழங்குவதன் மூலம் வன்னியில் உள்ள ஒரு குடும்பத்தை ஒருவர் பாராமறிக்க முடியும் என்று இறுதியில் முடிவெடுத்தார்கள். இவர்கள் சென்ற ஜனவரி மாதம் முதல் உதவி புரிந்தார்கள்.ஆனால் வன்னியில் அங்கவீனப்பட்டவர்கள் கிட்டத்தட்ட முப்பத்தியையாயிரம் பேர் இருக்கிறார்கள். இங்கு சிட்னியில் உதவுவதாகச் சொன்னவர்கள் மிகவும் குறைவான எண்ணிக்கையானவர்கள். அதிலும் குடும்பம் என்று இருப்பவர்கள் எல்லாரினாலும் தொடர்ந்து உதவி செய்ய முடியாது. மற்றையவர்கள் வேறு வேறு அமைப்புக்களின் உதவியுடன் தாயகத்துக்கு உதவி புரிபவர்கள். இந்நிலையில் சேரன் தன்னால் ஒரு நடன நிகழ்வினை நடாத்தி அதன் மூலம் கிடைக்கும் பணத்தினை தாயகத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்யலாம் என்று முடிவெடுக்கிறார். இந்நிலையில் சென்ற மார்ச் மாதம் 4ம் திகதி உமா அவர்கள் 'Patchwork' என்ற அமைப்பினை ஆரம்பித்தார். வன்னியில் செயல்படும் தொண்டர் அமைப்புக்களினூடாக அங்கு வலுவிழந்தோர்களுக்கு 'Patchwork' மூலம் உதவி செய்யப்படும்.

வன்னியில் காயப்பட்டு அங்கங்களை இழந்தவர்களுக்கு 'Patchwork' மூலம் உதவி புரிவதற்காக சேரனின் 'ஆஞ்சநேயம்' என்ற நடன நிகழ்வு சென்ற ஞாயிற்றுக்கிழமை 11ம்திகதி சிட்னியில் உள்ள பாங்ஸ் டவூண்(Bankstown) மண்டபத்தில் அதிக பார்வையாளர்கள் மத்தியில் நடைபெற்றது. வீரம்,பக்தி,வியப்பு போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தியவண்ணம் சேரன் அழகாக ஆடினார். இரசிகர்கள் மெய்மறந்து இரசித்த சேரனின் நடனத்துக்கு போட்டி போடும் விதத்தில் சிறப்பாக ஆடினார் கரிசன் இளங்கோவன். இவர் நியூசவூத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 2ம் ஆண்டு கல்வி கற்கும் மாணவர். இவர் சென்ற வருடம் சிட்னியில் இருந்து சென்று தமிழ் நாட்டில் உள்ள சிதம்பரம், தஞ்சாவூர் போன்ற இடங்களில் நடைபெற்ற நடனவிழாவில் கலந்து சிறப்பித்தார்.இவர் 7 வயதில் தனது தாயார் திருமதி சாந்தி இளங்கோவனிடம் முறைப் படி நடனம் பயின்றார். இவ்விருவர்களின் சவாலான நடனத்துக்கு ஏற்றவாறு சிறப்பாக நடனமாடினார் செல்வி இலாவண்யா தேவராஜா அவர்கள். இவர் ஜேர்மனியில் தனது 5 வயதில் இருந்து நடனம் பயின்றவர். அவுஸ்திரெலியாவுக்கு சிறுவயதில் புலம் பெயர்ந்தபின்பு திருமதி தமயந்தி பாலராஜ்,யாழினி திருலோஜன் அவர்களிடம் நடனம் பயின்றார். அடிலெய்ட் பல்கலைக்கழக பட்டதாரியான இலவண்யா தற்பொழுது 'இரசனா' நடனப்பள்ளியில் சேரனிடம் நடனம் கற்கின்றார்.

பாரத் மோகனின் மிடற்றிசை, நாராயணதாஸ் கோபதிதாசின் வயலின், கிறிசான் சேகரத்தின் மிருதங்கம், செந்தூரன் தேவராஜா, ஜனகன் சுதந்திரராஜ் ஆகியோரின் தாள வாத்தியங்கள், ஐங்கரன் மகாதேவனின் புல்லாங்குழல் ஆகிய பக்கவாத்தியங்களின் இசையும், பாட்டும் நடன நிகழ்வுக்கு மேலும் மெருகேற்றின. காயத்திரி கிருஸ்ணமூர்த்தி நட்டுவாங்கத்துடன், பொருத்தமான விளக்கங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் தந்தார். செந்தூரன் வழங்கிய சொற்கட்டுக்கள் நிகழ்ச்சிக்கு அழகு சேர்த்தன.

நிகழ்ச்சியின் இடையில் 'Patchwork' மூலம் வன்னியில் பயன் பெற்றவர்கள் சிலரின் கருத்துக்கள் திரையில் காணொளியில் காண்பிக்கப்பட்டன. உறுப்புக்கள், பார்வைகள் இழந்த இவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இந்நிலை பற்றிய சோகக்கதைகளையும்,'Patchwork' மூலம் கிடைத்த நன்மைகளையும் சொன்னார்கள். இவர்களின் சோகக்கதைகள் கேட்டு கண்கலங்கிய பார்வையாளர்கள், சேரனின் இந்நிகழ்வினால் 39000 அவுஸ்திரெலியா வெள்ளிகள் சேர்க்கப்பட்டதைக்கண்டு கை தட்டி மகிழ்ந்தார்கள். இந்நிகழ்வில் அவுஸ்திரெலியா பாராளுமன்ற உறுப்பினர்கள்,தொண்டர் அமைப்பு பிரதிநிதிகள் போன்ற அவுஸ்திரெலியர்களும் கலந்து சிறப்பித்தார்கள். நிகழ்ச்சி முடிய எதோ ஒருவிதத்தில் சிறு உதவியை தாயக மக்களுக்கு 'Patchwork' மூலம் உதவிக்கொண்டு சிறந்த நடன நிகழ்வை கண்டு களித்த மகிழ்ச்சியுடன் பார்வையாளர்கள் வீடு நோக்கிச் சென்றார்கள்.

'Patchwork' மூலம் உதவி வழங்க விரும்புபவர்கள், சந்தேகங்கள் இருந்தால் பின்வரும் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு கேளுங்கள். info@patchwork.org.au

தொடர்புடைய செய்திகள்/பதிவுகள்
1)சேரனின் 2006ல் நடைபெற்ற நடன நிகழ்வு
http://www.yarl.com/...ndpost&p=231916
2)சேரனின் 2007ல் நடைபெற்ற நடன நிகழ்வு
http://www.yarl.com/...showtopic=26745
3)சேரனின் 2008ல் நடைபெற்ற நடன நிகழ்வு
http://www.yarl.com/...showtopic=45728
4)சேரனின் 300 கிலோமீற்றர் நடைப்பயணம்
http://www.yarl.com/...showtopic=62422

5)Many organisations exist to provide in post-war and post-conflict situations, but few are catered to provide for the high needs of persons with disabilities. A new organisation, Patchwork has formed to address this void. Patchwork seeks to be a leading development and advocacy organisation that provides emergency assistance and brings issues concerning persons with disabilities to the forefront.
Patchwork is being launched officially on Thursday 4th March 2010 at Parramatta Town Hall, Church Street, Parramatta. The event includes: Guest Speakers, Photo Exhibition, Live Music and Light refreshment.
For more info contact: Uma Raj Ph: +61 420 791 739
Email: info@patchwork.org.au Website: www.patchwork.org.au
http://www.disabilit...etin/10/02.html

Contact us :
Uma Raj +61 420 791 739
info@patchwork.org.au
www.patchwork.org.au
----------------------------------------------------------------------------
What is Patchwork?

Patchwork is set up to provide assistance for people with disabilities, who have been affected by war. It seeks to be a leading development and advocacy organisation that provides emergency assistance and brings issues concerning persons with disabilities to the forefront.

War is a horrific experience in which all survivors are subject to great hardship. As a result of war, people face loss of life, property, and injury and are often subject to forced displacement.

The UNDP has estimated that 10% of the world’s population is disabled. Of this, 80% of persons with disabilities live in developing countries. The UN has stated that for every child killed in warfare, three are injured and permanently disabled.

As a community based non government organisation we aim to work with both local and international NGOs, and government agencies to provide services focusing on empowerment, independence and equity for persons with disabilities, affected by war.



Patchwork launches first project

Patchwork’s first project is for the war affected people of Northern Sri Lanka. There are an estimated 35,000 people living with disabilities, some of whom live with multiple disabilities. These include sensory, physical, intellectual, cognitive and psychological disabilities.

Currently many thousand are living in refugee camps or have recently been released. Among these internally displaced people, the number of persons with disabilities is high, yet they are the most hidden, vulnerable,neglected and socially excluded among internally displaced people today.

As the living cost of persons with disabilities is higher than their non-disabled counterparts, our initial aim is to assist in obtaining equipment or devices necessary for daily living, such as wheelchairs, crutches and white canes.

We advocate policy development in areas of disability during war and post- war periods to improve the protection and conditions of persons with disabilities,at the national and international level. To this end, Patchwork has formulated policy documents on the treatment of persons with disabilities during forced migration and internal displacement and is keen to develop this work further.

Patchwork aims to obtain non-profit charity status recognised by ACFID and the Australian government as an international development organisation. With your support, this goal can be achieved as soon as possible.

Core Values
We believe that persons with disabilities,
affected by war:
Are entitled to basic human rights,legal, social and consumer rights that must be recognised and respected.
Are entitled to live free from prejudice,discrimination and vilification and ought to be empowered to exercise their rights and responsibilities.
Have the right to define the policies and programs that affect their lives.
Are entitled to a decent standard of living, an adequate income and to lead active and satisfying lives.

We strive to fulfil the United Nations Convention on the Rights of Persons with Disabilities, Article 1 to:
promote, protect and ensure the full and equal enjoyment of all human rights and fundamental freedoms by all persons with disabilities, and to promote respect for their inherent dignity

''98% OF CHILDREN WITH DISABILITIES IN DEVELOPING COUNTRIES DO NOT ATTEND SCHOOL.''(UNESCO)

Contact us :
Uma Raj +61 420 791 739
info@patchwork.org.au
www.patchwork.org.au